

சென்னை: காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான 3 யானைகளை மீண்டும் மடத்திடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவி்த்து வனத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தில் நடைபெறும் வழிபாடுகள், பூஜைகள், கோயில் திருவிழாக்களுக்காக இந்து, ஜெயந்தி, சந்தியா ஆகிய 3 யானைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த யானைகளை கவனித்து வந்த யானைப்பாகன் கடந்த 2015-ல் உயிரிழந்துவிட்டதால் இந்த 3 யானைகளும் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.
அதன்படி இந்த யானைகள் திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இந்த 3 யானைகளையும் பராமரிக்க தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதால், அவற்றை கோனேரிக்குப்பம் யானைகள் மையத்துக்கு அனுப்பி வைக்கக் கோரி காஞ்சி காமகோடி பீடம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான இந்த 3 யானைகளையும் மீண்டும் மடத்தின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்து அவற்றின் உடல்நிலை குறித்து அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டுமென வனத்துறைக்கு உத்தரவி்ட்டிருந்தார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து வனத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, வனத்துறை தரப்பில், “அந்த 3 யானைகளுக்கும் வயதாகி விட்டது. கடந்த 2019-ம் ஆண்டு சுமார் 58 ஏக்கர் பரப்பில் உள்ள திருச்சி முகாமுக்கு இந்த 3 யானைகளும் மோசமான நிலையில் கொண்டு வரப்பட்டன.
இந்த முகாமில் 8 யானைகள் இருந்த நிலையில் அதில் ஒரு யானை உயிரிழந்து விட்டது. தற்போது இந்த 3 யானைகளையும் காஞ்சி மடத்துக்கு அனுப்பி வைத்தால் மீண்டும் அவற்றின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும்.
எனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும்” என்று கோரப்பட்டது. அதையேற்க மறுத்த நீதிபதிகள், “அந்த 3 யானைகளும் கடந்த 6 ஆண்டுகளாக வனத்துறையின் பராமரிப்பில் தானே இருந்தன.
தற்போது அந்த யானைகளை பராமரிக்க தேவையான ஏற்பாடுகளை மடத்தின் நிர்வாகம் செய்துவிட்ட நிலையில் அந்த யானைகளை மீண்டும் மடத்திடம் ஒப்படைக்க முடியாது என்று மறுக்க முடியாது.
எனவே அந்த 3 யானைகளுக்கும் உரிய மருத்துவ பரிசோதனைகளை நடத்தி அவற்றை சங்கர மடத்தின் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை'' எனக்கூறி வனத்துறையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.