

சென்னை அண்ணா நகரில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: அண்ணா நகர் ஜிஎஸ்டி ஆணையரகத்தில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இரண்டரை மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. சென்னை அண்ணாநகர் மேற்கு, 2-வது அவென்யூவில் ஜிஎஸ்டி ஆணையரகம் செயல்பட்டு வருகிறது.
நேற்று காலை 8.30 மணியளவில், இந்த அலுவலகத்தின் தரைத்தளத்தில் உள்ள கேன்டீனில் இருந்து திடீரென புகை கிளம்பியது. அது சிறிது நேரத்தில் தீயாக மாறி மளமளவென பெண் அதிகாரிகள் ஓய்வறை மற்றும் இதர அறைகளுக்கு பரவியது.
இதனால் ஜிஎஸ்டி அலுவலக வளாகத்தில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறினர். இதுகுறித்து தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தீயணைப்புத் துறை இணை இயக்குநர் சத்யநாராயணா தலைமையில் 10 தீயணைப்பு வாகனங்களில் வந்த 60 தீயணைப்பு வீரர்கள் 2.30 மணி நேரம் போராடி, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் முக்கிய ஆவணங்கள், கேன்டினில் இருந்த பாத்திரங்கள், மின்னணு உபகரணங்கள் உட்பட பல்வேறு வகையான பொருட்கள் சேதமடைந்தன.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது சதிச் செயலா என திருமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக தடயவியல் துறை அதிகாரிகளும் தீ விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர்.