

கோப்புப் படம்
திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் தீபம் ஏற்றும் பகுதியில் திடீரென பற்றிய தீயால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி கோயில். முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் இக்கோயிலுக்கு நாள் தோறும் தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற ராஜகோபுரம் எதிரே உள்ள மாட வீதியில் அகல் விளக்கு மற்றும் எலுமிச்சம் பழத்தில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள்.
அந்த வகையில் , இன்று காலை அகல் விளக்குகளில் பெண் பக்தர்கள் தீபம் ஏற்றி கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்தப் பகுதியில் தீப்பற்றி எரிய தொடங்கியது.
இதையடுத்து, அங்கு பணியில் இருந்த கோயில் ஊழியர்கள் உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சுவாமி தரிசனம் செய்வதற்கு முன்பாக நடந்த இந்த சம்பவத்தால் திருத்தணியில் பரபரப்பு ஏற்பட்டது.