

சென்னை: ‘‘தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 4 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும்’’ என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மார்ச் 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, வேட்பு மனு தாக்கல் மார்ச் 30-ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்.6 ஆகும். இதற்கிடையில், மார்ச் 31 (மகாவீர் ஜெயந்தி), ஏப்.1 (வங்கி விடுமுறை), ஏப்.3 (புனித வெள்ளி), ஏப்.5 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 4 நாட்கள் விடுமுறை என்பதால் அந்த 4 நாட்களில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது. இதர 4 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
மேலும், வேட்பு மனுக்களை காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை வழங்கலாம். வேட்பு மனுக்கள் பரிசீலனை ஏப்.7-ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற ஏப்.9-ம் தேதி கடைசி நாள்.
இதற்கிடையே, மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் தொகுத்து தயாரித்துள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் -2026 கையேடு வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கையேட்டை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா வெளியிட்டு பேசியதாவது:
தமிழக தேர்தல் சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. குறிப்பாக நகர்ப்புறங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாக உள்ளது. அதை அதிகரிக்க ஊடகங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும். சமூக ஊடகங்களில் போலி செய்திகளைத் தடுக்க வேண்டும். ஊடகங்கள் ஊடக நெறி தவறாமல் உண்மையான செய்திகளை வெளியிட வேண்டும்.
இந்த தேர்தல் கையேடு, தேர்தல் தொடர்பான அனைத்து தரவுகளையும், தகவல்களையும் கொண்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள், தேர்தல் பணிகள், கடந்த கால தேர்தல் குறித்த புள்ளி விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பண்டைய குடவோலை முறை தொடங்கி தற்போது வரையிலான தேர்தல் குறித்த அனைத்து வரலாற்று தகவல்களையும் உள்ளடக்கியதாக இந்த கையேடு உருவாக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள இந்த சூழலில், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலி செய்திகளைத் தவிர்த்து அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்த பின்னரே ஊடகங்கள் வெளியிட வேண்டும். இவ்வாறு அர்ச்சனா பட்நாயக் பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பல்வேறு வியாபாரிகள் சங்கங்கள் கையில் கொண்டு செல்லும் பணத்தின் அளவு ரூ.50 ஆயிரமாக இருப்பதை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். நாங்களும் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறோம். கிராமப் பகுதிகளில் பணம் கொண்டு செல்லும் போது ஆவணங்களைக் காண்பிக்க முடியவில்லை என்பது போன்ற சிரமங்கள் இருக்கின்றன. சட்டத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதன்படிதான் பணியாற்ற வேண்டி இருக்கிறது. மருத்துவம் போன்ற அவசர தேவைகளுக்குப் பணத்தைக் கொண்டு செல்லும் போது உரிய ஆவணத்தை வாட்ஸ் அப்பில் காட்டினாலும் ஏற்றுக் கொள்ளுமாறு தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுக்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்" என்றார்.