சிவகாசியில் வேலையிழந்த பெண் தொழிலாளர்கள் கண்ணீர் மல்க வீடியோ: அமைச்சர் கீர்த்தனா நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பிரதிநிதித்துவப் படம்

பிரதிநிதித்துவப் படம்

Updated on
1 min read

சிவகாசி: சிவகாசி பகுதியில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் வேலை இழந்துள்ள பட்டாசுத் தொழிலாளர்கள் சமூக வலைதளங்களில் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு அமைச்சர் கீர்த்தனா தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி சுற்று வட்டாரப் பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின் உரிமம் பெற்று சிறிய மற்றும் பெரிய அளவில் 1,080-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் உள்ளன. நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் 90 சதவீதத்துக்கும் மேல் சிவகாசி பட்டாசு ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில் 70 சதவீத பட்டாசுகள் பெரிய ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு உரிமம் ரத்து செய்யப்பட்ட 80-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளுக்கு உற்பத்தி அனுமதி வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு 200-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகளில் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டது.

பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக கூறி, தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன.

பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தியும், ஆய்வை கண்டித்தும் சிறு பட்டாசு ஆலை உரிமையாளர் சங்கம் சார்பில் ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிவகாசி தொகுதி எம்எல்ஏவான தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தொடர் விபத்து மற்றும் உயிரிழப்புகளை தடுக்கவே ஆய்வுகள் நடைபெறுகின்றன. உங்கள் பாதுகாப்பே முக்கியம், யாரும் கவலைப்பட வேண்டாம்.

சிவகாசியின் உயிர் நாடியான பட்டாசு தொழிலும், மக்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில், நாங்கள் உறுதியாக உள்ளோம், எனப் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில், வேலையிழந்த பட்டாசு தொழிலாளர்கள் தங்கள் துயரத்தை விளக்கி பேசிய உருக்கமான வீடியோ வைரலாகி வருகிறது. சிவகாசி பட்டாசுத் தொழிலாளி குருவம்மாள் என்பவர் பேசிய வீடியோவில், நாங்கள் வேலையின்றி குழந்தைகள் பசி பட்டினியில் வாடுகின்றனர்.

பட்டாசு வெடித்து இருக்கிறோமோ, இல்லையோ பட்டினியால் இறந்து விடுவோம். முதலில் பட்டாசு ஆலைகளை திறந்து வையுங்கள். எங்கள் ஊர் பிரச்சினையை யாரும் கண்டுகொள்ளவில்லை. முதல்வர் ஐயா பாருங்கள்.. என கண்ணீர் மல்க பேசி இருந்தார்.

மற்றொரு பெண் தொழிலாளி பேசிய வீடியோவில், சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள் உணவுக்குக் கூட வழியின்றி வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி வருகிறோம்.

எல்லா மக்களுக்கும் துணையாக இருப்பேன் என்று சொன்ன அமைச்சர் கீர்த்தனா, எங்களது கஷ்டத்தை கேட்கக்கூட வராமல் இருக்கிறீர்களே.

எங்கள் குழந்தைகளின் கல்விக் கட்டணத்தைக் கூட செலுத்த முடியாமல் தவித்து வருகிறோம். பட்டாசு ஆலைகளை திறந்து வைத்துவிட்டு சிவகாசிக்கு வர வேண்டும், எனக் கூறியுள்ளார்.

<div class="paragraphs"><p>பிரதிநிதித்துவப் படம்</p></div>
வானில் பறந்த முதல் பறவை எது? | டிங்குவிடம் கேளுங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in