

சென்னை: யானைகளை இடமாற்றம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க நிபுணர்குழுவை அரசு அமைத்துள்ளது.
இதுகுறித்து, வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு அறிவியல் ரீதியான வனவிலங்கு பாதுகாப்பு, வனவிலங்குகளை மனிதாபிமான அடிப்படையில் நிர்வகித்தல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கிறது. மனித- வன விலங்குகள் மோதலைத் தடுக்கவும் மற்றும் மனித உயிர்களைப் பாதுகாக்க வேண்டிய சூழ்நிலைகளில் மட்டுமே யானைகள் மற்றும் பிற வனஉயிரினங்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றன.
கடந்த சில மாதங்களில், 2 காட்டு யானைகள் இடமாற்றம் செய்யப்பட்டபோது உயிரிழந்ததன் மூலம் தற்போதுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டிய சூழல் எழுந்துள்ளது. யானைகளை இடமாற்றம் செய்யும் நடைமுறைகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்காக, வனவிலங்குகளைப் பிடிப்பது, இடமாற்றம் செய்வது மற்றும் விடுவிப்பது குறித்த தெளிவான நெறிமுறைகளை வகுக்க வேண்டியது அவசியம். குறிப்பாக யானைகளை இடமாற்றம் செய்வது பற்றிய தெளிவான நடைமுறைகளை வகுக்க மாநில அளவிலான நிபுணர் குழுவை அரசு அமைத்துள்ளது.
அதன்படி, உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவன இயக்குநர் அ.உதயன் தலைமையில் சுற்றுச்சூழல், வனத்துறைசிறப்பு செயலர் அனுராக் மிஸ்ரா,நீலகிரி மாவட்ட வன அலுவலர் என்.வெங்கடேஷ் பிரபு, ஸ்ரீவில்லிப்புத்தூர் மேகமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவ அலுவலர் கே.கலைவாணன், முதுமலை புலிகள் காப்பக வன கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் ராஜேஷ், மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி உதவி பேராசிரியர் என்.பாஸ்கரன் ஆகியோரை உறுப்பினராகக் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேவைக்கேற்ப நிறுவனங்கள், நடத்தை சூழலியல் வல்லுநர்கள், ஜிஐஎஸ் நிபுணர்களை கூடுதல் கள நிபுணர்களாக குழுநியமித்துக் கொள்ளவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது, இடமாற்றம் செய்யப்பட்ட யானைகளின் இறப்பு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளின் மதிப்பீடு மற்றும் மதிப்பாய்வை மேற்கொள்ளும்.
தேசிய மற்றும் உலகளாவிய அறிவியல் வழிகாட்டுதல் தொடர்பான தற்போதைய நெறிமுறைகளை மதிப்பீடு செய்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளை உருவாக்கும். இந்தக் குழு 2மாதங்களுக்குள் தனது அறிக்கையையும் வரைவு வழிகாட்டுதலையும் அரசுக்கு சமர்ப்பிக்கும்.