

சென்னை: மின்நுகர்வோரிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட புகார் எழுந்த நிலையில், 3.70 லட்சம் வீட்டு மின் இணைப்புகளில் மறுஆய்வு செய்ய மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நடப்பு ஜூலை மாதத்துக்கான வீட்டு மின் கட்டணம் வழக்கத்தை விட பல மடங்கு உயர்ந்து பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, கடந்த மே மாதக்கட்டணத்தோடு ஒப்பிடும்போது, இருமடங்கு மின்கட்டணம் அதிகரித்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இதனிடையே பில்லிங் செயல்முறையில் ஏற்பட்ட பிரச்சினை மற்றும் மீட்டர் கணக்கீட்டுக் குறைபாடுகள் காரணமாக நுகர்வோருக்கு மின்கட்டணம் அதிகரித்ததாக மண்டல மின் தலைமை பொறியாளர் சமீபத்தில் விளக்கமளித்திருந்தார். இந்த நிலையில் கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டது குறித்தும், 3.70 லட்சம் வீட்டு மின் இணைப்பினை ஆய்வு மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மின்வாரியத் தலைவர் அருண் ராய் அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
கடந்த மே 2026 மாத மின் கட்டணத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு ஜூலை 2026 மாதத்தில் மின் நுகர்வு மற்றும் கட்டண விகிதம் 3.70 லட்சம் வீட்டு மின் இணைப்புகளுக்கு அதிகரித்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த மின் இணைப்புகளில் நேரடியாக கள ஆய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மறுஆய்வுப் பணிகளை விரைந்து முடிக்க பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இதன்படி தலைமைப் பொறியாளர் 25 மின் இணைப்புகளையும், மேற்பார்வைப் பொறியாளர் 50 மின் இணைப்புகளையும், செயற்பொறியாளர் 75 மின் இணைப்புகளையும், துணை நிதி கட்டுப்பாட்டாளர் 50 மின் இணைப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டும். இவர்கள் மட்டுமின்றி, உதவி செயற்பொறியாளர் 100, கணக்கு அதிகாரி 150, மூத்த மதிப்பீட்டு அதிகாரி 150, உதவி கணக்கு அதிகாரி 100, மதிப்பீட்டு அதிகாரி 150 மற்றும் உதவிப் பொறியாளர் 100 மின் இணைப்புகளையும் நேரடியாகச் சென்று சரிபார்க்க வேண்டும். இந்த நேரடி மறுஆய்வுப் பணிகள் அனைத்தும் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதிக்குள் முழுமையாக முடிக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், இந்த ஆய்வுகளின் போது மின் கணக்கீட்டில் ஏதேனும் தவறுகள் அல்லது பிழைகள் கண்டறியப்பட்டால், உடனடியாகத் தேவையான திருத்தங்களை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மின்வாரியத் தலைவர் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.