சென்னை: ஆகஸ்ட் 16-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு பேரணியில் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என்று ‘வீ த லீடர்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், “நம் மண், நம் நீர், நம் காற்று இவை அனைத்தும் நமது அடுத்த தலைமுறைக்கு நாம் பாதுகாத்து வழங்க வேண்டிய பொக்கிஷங்கள். நம் தலைமுறையையும், வருங்கால தலைமுறையையும் பாதுகாக்க வேண்டிய மிக முக்கிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை முன்னெடுத்துச் செல்லும் வகையில், வரும் ஆகஸ்ட் 16, 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 3.00 மணிக்கு, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் நடைபெறும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில், அனைவரும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
மரங்களை வளர்ப்போம், நீர்நிலைகளைப் பாதுகாப்போம். நமது செயல்களால் ஒரு பசுமையான தமிழகத்தை உருவாக்குவோம். சுற்றுச்சூழல் பாதுகாப்பை மக்கள் இயக்கமாக மாற்றுவோம். மாறுவோம். மாற்றுவோம்” என தெரிவித்துள்ளார்.