

நுங்கம்பாக்கத்தில், மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டதையடுத்து, ரயிலில் இருந்து இறங்கி சென்ற பயணிகள்.
நுங்கம்பாக்கம் அருகே உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால், தாம்பரம் கடற்கரை தடத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மதியம் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே மதியம் 1.40 மணி அளவில் மின்சார ரயில் இயக்கத்துக்கான உயர் அழுத்த மின்கம்பி திடீரென அறுந்து விழுந்து, மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
இதனால், தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் சென்ற மின்சார ரயில்கள் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி, பரங்கிமலை, பழவந்தாங்கல் வரை ஆங்காங்கே நிறுத்தப் பட்டன.
ரயில்கள் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் குழப்பம் அடைந்தனர். ரயில் சேவை சீராவதற்கு சற்று நேரம் ஆகும் என்று ரயில் நிலையங்களில் அறிவிப்பு வெளியானது. இதனால், எழும்பூர், சென்ட்ரல், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று, ரயில்கள், பேருந்துகளைப் பிடிக்க இருந்தவர்கள் ரயில்களில் இருந்து இறங்கி, மழையில் நனைந்தபடியே தண்டவாளத்தில் நடந்து சென்றனர்.
இதற்கிடையே, பழுது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், ரயில்வே பணியாளர்கள் விரைந்து வந்து, உயர் அழுத்த மின்பாதையில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மதியம் 3 மணி அளவில் மின்சார ரயில் சேவை சீரானது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டதால், பயணிகள் மிகவும் அவதியடைந்தனர்.