

ஊட்டி தீட்டுக்கலில் குஷ்பு வந்த ஹெலிப்காப்டரையும் அவரது கைப்பையையும் சோதனையிட்ட பறக்கும் படையினர்.
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மு.போஜராஜனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு நேற்று கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி வந்தார்.
தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்துக்கு வந்ததும், ஹெலிகாப்டர் மற்றும் குஷ்புவின் கைப்பையை பறக்கும்படையினர் சோதனையிட்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் குஷ்பு கூறியதாவது: 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா என்பது, நம் நாட்டின் ஒவ்வொரு பெண்ணும் நீண்டகாலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு கனவாகும். பெண்களை வலுவூட்டுவதில் பிரதமருக்கு உறுதியான ஈடுபாடு இல்லாவிட்டால், இது சாத்தியமாகி இருக்காது.
நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் கட்டாயம் அதிகாரமளிக்கப்பட வேண்டும் என்று அவர் உண்மையாகவே நம்புகிறார். தொகுதி மறுவரையறை என்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் பொருந்தக்கூடிய ஒரு விஷயமாகும்.
ஆனால், தொகுதி மறுவரையறை என்றால் என்ன என்பதைப் படித்துப் புரிந்துகொள்ளாமலேயே, அதுகுறித்து அவசரப்பட்டுப் புகார் தெரிவிக்கும் ஒரு முதல்வர் தமிழகத்தில் இருப்பது துரதிர்ஷ்டவசமானது.
உங்கள் தோல்விகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப தொகுதி மறுவரையறையை பயன்படுத்த முயற்சிக்காதீர்கள். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் மஞ்சூர் பகுதியில் பாஜக வேட்பாளர் மு.போஜராஜனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.