

சென்னை: இந்தியத் தேர்தல் ஆணைய மண்டல மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று சென்னை வருகிறார்.
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் இணைந்து நடத்தும், “ஜனநாயகத்தைக் கற்போம், ஜனநாயகத்தை வழிநடத்துவோம்” என்ற கருப்பொருளிலான மண்டல மாநாடு இன்று சென்னையில் நடக்கிறது.
இம்மாநாட்டுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமை தாங்குகிறார். அவருடன் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு, தலைமை இயக்குநர் (ஊடகம்) ஆஷிஷ் கோயல் மற்றும் தலைமை இயக்குநர் (தகவல் தொழில்நுட்பம்) சீமா கண்ணா ஆகியோர் பங்கேற்கின்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 300 பள்ளிகள், 75 கல்லூரிகள் மற்றும் 25 பல்கலைக்கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 1,000 பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.