

நாகர்கோவில் கிளைச்சிறையில் உயிரிழந்த விசாரணைக் கைதி சபரிவர்மன்
நாகர்கோவில்: நாகர்கோவில் சிறையில் மாற்றுத் திறனாளி சபரிவர்மன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைதான 8 கைதிகள் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அருகே உள்ள ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சபரிவர்மன் (33). மாற்றுத் திறனாளியான இவர் அந்தப் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவரது கடையில் தென்தாமரைகுளம் போலீஸார் நடத்திய சோதனையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து சபரிவர்மன் கைது செய்யப்பட்டு, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த 13-ம் தேதி அதிகாலை சபரிவர்மன் சிறையில் அடித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 19 இடங்களில் பலமாக தாக்கியதற்கான காயங்கள் இருந்தன. 3 சிறை வார்டன்கள், 8 கைதிகள் சேர்ந்து சபரிவர்மனை தாக்கியது விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக நேசமணிநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து சிறை வார்டன்கள் ஜெகன், திருமலைநம்பி, சிவக்குமார் ஆகியோரும் கைதிகளான விஷ்ணு, சாரதி, ஜெகன், சரத், பெருமாள், சேதுராம், அஜித், அரவிந்த் ஆகியோரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கைதான வார்டன்கள் 3 பேரும் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாங்குநேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 8 கைதிகளும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.