

இபிஎஸ்
சென்னை: தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி உள்ளது என சேலத்தில் சரக்கு வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்து சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “சேலம் - உத்தமசோழபுரம் பகுதியில், கோயம்புத்தூரிலிருந்து சேலம் நோக்கி வந்த தமிழ்நாடு அரசு பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. சாலையோர தடுப்பை உடைத்து எதிர்புறம் சென்ற வாகனங்கள் மீது அதிவேகமாக மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர் என்ற செய்திகள் வருகின்றன, வருத்தத்துக்குரிய இந்தத் தகவல் அறிந்து மிகுந்த துயருற்றேன்.
தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி உள்ள நிலையில், இந்த ஆட்சியில் அரசுப் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதையே இந்த சம்பவம் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம்பெற்று இல்லம் திரும்ப இறைவனை வேண்டுகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.