

சென்னை: “வரும் 17-ஆம் தேதி தமிழகப் பெண்களின் பாதுகாப்பை நிர்கதியாக்கிய உங்கள் அரசுக்கு முடிவுரை கட்டப்போகும் மாபெரும் போராட்டத்தின் மூலம் வருவாய் மாவட்ட வாரியாக மக்கள் மன்றத்தில் களம் காண உள்ளது அதிமுக கூட்டணி” என அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “விளாத்திக்குளம் வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை கொலை நாட்டையே உலுக்கியுள்ளது. பாதிக்கப்பட்டு உயிரிழந்த அந்தச் சிறுமியின் குரலாக நீதி கேட்டு நாடாளுமன்றம் முதல் நீதிமன்றம் வரை ஒலித்து வருகிறது அதிமுக. களத்தில் உறவினர்கள் - ஊர்மக்கள் போராட்டமும் வலுப்பெற்று வருகிறது.
திமுக அரசின் சாக்கு போக்குகளை நம்பத் தயாராக இல்லை என்பதற்கு, முதல்வரின் தங்கையும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழியை மக்கள் விரட்டி அனுப்பியதே சாட்சி.
இவ்வளவு கொடூரமான வழக்கில் குற்றவாளியைக் கண்டறிய முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய கேவலம். காவல் துறை சிஸ்டத்தை நீங்கள் எந்த அளவுக்கு சீரழித்து உள்ளீர்கள் என்பது இப்போதாவது உங்களுக்குப் புரிகிறதா?
இது இத்தோடு நிற்கப் போவது இல்லை. வரும் 17-ம் தேதி தமிழகப் பெண்களின் பாதுகாப்பை நிர்கதியாக்கிய உங்கள் அரசுக்கு முடிவுரை கட்டப் போகும் மாபெரும் போராட்டத்தின் மூலம் வருவாய் மாவட்ட வாரியாக மக்கள் மன்றத்தில் களம் காண உள்ளது அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி.
தூத்துக்குடி நிர்பயாவுக்கு உரிய நீதி கிடைப்பதை அதிமுக உறுதி செய்யும். விரைவில் அமையப்போகும் அதிமுக அரசு, எப்படி ஜெயலலிதா தாய் போல பெண்களைக் காத்தார்களோ, அதேபோல, ஒரு தமையனாக நின்று தமிழகப் பெண்களை அரண் போல் காக்கும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.