சென்னை: தேனாம்பேட்டை, எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தரணிதரன். இவர் போக்குவரத்துத் துறையில் துணை ஆணையராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது பணிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஏற்கெனவே விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
இதன் தொடர்ச்சியாக, நேற்று காலை முதல் தரணிதரன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல், சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த தொழிலதிபர் முருகேசன் என்பவரது வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
டிரான்ஸ்போர்ட் தொழில் செய்துவரும் இவருக்கும், இந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஐதராபாத்தைச் சேர்ந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் இந்தச் சோதனையில் நேரடியாகப் பங்கேற்றதாகவும், இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போது அந்த ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி நடைபெறுகிறது. ஆய்வு முடிந்த பிறகு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.