

குழந்தையின் சுவாச குழாயில் இருந்து எடுக்கப்பட்ட விசில்.(உள்படம்) எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை இயக்குநர் எஸ்.மதிவாணன்.
சென்னை: விளையாடும்போது தவறுதலாக 5 வயது குழந்தையின் நுரையீரல் பாதைக்குள் சிக்கிய விசிலை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.
எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் எஸ்.மதிவாணன் கூறியதாவது: திருவண்ணாமலையை சேர்ந்த 5 வயது பெண் குழந்தை ஒன்று, விசில் ஊதி விளையாடிக் கொண்டிருந்தபோது, தவறுதலாக அதை விழுங்கிவிட்டது.
அது சுவாசப் பாதைக்குள் சென்று சிக்கிக் கொண்டது. இதையடுத்து, குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு எக்ஸ்ரே, ஸ்கேன் பரிசோதனைகள் செய்யப்பட்டதில், எந்த பொருளும் தென்படவில்லை.
இதனால், குழந்தையை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டனர். ஆனால், குழந்தை சுவாசிக்கும்போது எல்லாம் விசில் சத்தம் வந்து கொண்டே இருந்தது. இதையடுத்து உயர் சிகிச்சைக்காக குழந்தையை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து வந்தனர்.
இங்கு பரிசோதனை செய்து பார்த்ததில் குழந்தையின் நுரையீரலுக்குள் உள்ள வலது சுவாச குழாயில் நான்காம் நிலை பகுதியில் விசில் சிக்கியிருந்தது தெரியவந்தது. வழக்கமாக, குழந்தைகள் எதையாவது விழுங்கிவிட்டால், உணவு குழாய் வழியே ஜீரண மண்டலத்துக்குள் சென்றுவிடும். அரிதாக இந்த குழந்தையின் வலது பக்க நுரையீரல் சுவாச பாதையின் விசில் சிக்கிக் கொண்டுள்ளது.
இதையடுத்த, மருத்துவமனையின் நுரையீரல் பிரிவு பேராசிரியர் பாலமுருகன் தலைமையில் மருத்துவர்கள் ஷாஜாத்தி பேகம், அசோக் குமார், சக்திவேல் ஆகியோர் அடங்கிய பல்நோக்கு மருத்துவக் குழுவினர் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முன்வந்தனர்.
அதன்படி, ஃபைபர் ஆப்டிக் ப்ராங்கோஸ்கோபி எனப்படும் ஊடுகுழாய் கருவியை குழந்தையின் சுவாச பாதையில் செலுத்தி 3 மணி நேரத்துக்கு பிறகு விசிலை வெளியே எடுத்தனர். இந்த சிகிச்சையின்போது குழந்தைக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது.
தனியார் மருத்துவமனைகளில் இதற்கு ரூ.3 லட்சம் வரை செலவாகும். இந்த சிகிச்சை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டது.
குழந்தைகளுக்கு விசில், சிறு பொருட்கள், பட்டன், பேட்டரி போன்றவற்றை விளையாட வழங்கக்கூடாது. தவறுதலாக விழுங்கும்போது, அது எளிதில் சுவாச பாதைக்குள் சிக்கிக் கொள்ளும்.பெற்றோர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.