

முதல்வர் ஸ்டாலின்
சென்னை: “சட்டப்பேரவையில் ஆண்டின் முதல் கூட்டத் தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கும் வழக்கத்தை ஒழிப்பதற்கு அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரத் திமுக போராடும்” என தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘முதலில் தமிழ்நாடு, அடுத்து கேரளம், இப்போது கர்நாடகா. இதன் நோக்கம் தெளிவானது, வேண்டுமென்றே செய்வது.
மாநில அரசுகள் தயாரித்தளிக்கும் உரையை ஆளுநர்கள் வாசிக்க மறுத்து, குறிப்பிட்ட கட்சியின் முகவர்கள் போல நடந்துகொள்வது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைச் சிறுமைப்படுத்தும் செயலாகும்.
நான் முன்பே தெரிவித்தபடி, சட்டமன்றத்தில் ஆண்டின் முதல் கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறைக்கு முடிவுகட்டுவதே இதற்கான தீர்வாக அமையும்.
இந்தியா முழுவதும் இந்தக் கருத்தைக் கொண்டிருக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளோடும் கலந்தாலோசித்து, வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே இந்தப் பயனற்ற, நடைமுறைக்குப் பொருந்தாத வழக்கத்தை ஒழிப்பதற்கு அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரத் தி.மு.க. போராடும்’ எனத் தெரிவித்துள்ளார்.