

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, குஷ்பு, அண்ணாமலை, பழனிசாமி மற்றும் ஜெயக்குமார் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு கடந்த 2023 ஜூன் 16 அன்று கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பகுதியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்ற கிருஷ்ணமூர்த்தி (63), தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக நிர்வாகிகளான குஷ்பு, அண்ணாமலை மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் குறித்து அவ தூறு பரப்பும் வகையிலும் சாதி, மத, மொழி கலவரத்தைத் தூண்டும் வகையிலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
இதன்பேரில் பல்வேறு பிரிவுகளின்கீழ் கொடுங்கையூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை 2023 ஆக.18 அன்று கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பி.ரேவதி முன்பாக நடந்து வந்தது. அப்போது அரசு தரப்பில் குற்றவியல் வழக்கறிஞர் சம்பத்குமார் ஆஜராகி குற்றச்சாட்டை நிரூபித்தார்.
அதையடுத்து நீதிபதி ரேவதி, குற்றம்சாட்டப்பட்ட திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை நிறுத்தி வைத்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.