

சென்னை: குன்னம் பகுதியில் திமுக - விசிகவினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்ட நிலையில், ‘ஆரோக்கியமான கருத்து மோதலே ஜனநாயகத்துக்கு அரண்' என திமுக எம்.பி ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் அருகே குன்னம் பகுதியில் திமுக - விசிகவினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. குன்னம் தொகுதி எம்எல்ஏ எஸ்.எஸ்.சிவசங்கரின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வுக்குச் சென்ற திமுகவினரை, குன்னம் பேருந்து நிலையம் அருகே விசிகவினர் வழிமறித்துத் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விசாரணையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, விசிகவை விமர்சனம் செய்தது தொடர்பாக, குன்னம் தொகுதி விசிகவினர் கோபம் அடைந்து, திமுகவினர் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.
இந்நிலையில், திமுக எம்.பி ஆ.ராசா தனது எக்ஸ் தள பக்கத்தில் “ஆரோக்கியமான கருத்து மோதலே ஜனநாயகத்துக்கு அரண். கரமோதலும் களமோதலும் ஜனநாயகத்துக்கு முரண் மட்டுமல்ல; மூடத்தனம். ‘வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்’ என்ற கலைஞரின் முழக்கத்தை இதயத்தில் ஏந்துவோம்!” என்று கூறியுள்ளார்.