

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் திமுக எம்எல்ஏ சிவசங்கர் பேசியதாவது:
தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் இசைக்கப்பட வேண்டும் என்பது நீண்டகாலமாக பின்பற்றப்படும் மரபு. ஆனால் ஆளுநர் உரையின்போது, நிகழ்ச்சியின் தொடக்கத்திலும், இறுதியிலும் என 2 முறை தேசிய கீதம் பாடப்பட்டது.
இதற்கு ஆளுநர் நன்றி தெரிவித்தார். பேரவைத் தலைவரும் நன்றி தெரிவித்தார். ஆளுநருடனான உங்களின் இணக்கம் எதுவரை செல்லப் போகிறது என்பதை உங்கள் கூட்டணிக் கட்சியினரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
அப்போது பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர் குறுக்கிட்டு, ‘‘ஆளுநர் உரையை தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்பதில் உங்களைப் போலவே நாங்களும் உறுதியாக இருக்கிறோம். எந்த மாநில அரசாக இருந்தாலும் ஆளுநரோடு இணக்காக இருக்க வேண்டும் என்பதை கொள்கையாக கடைபிடித்து வருகின்றன.
இருப்பினும் தமிழக மக்களின் உரிமையை விட்டுக்கொடுக்காமல், பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ளது. சரியான முறையில்தான் இந்த அரசு முடிவெடுத்து நடந்துகொண்டிருக்கிறது. எனவே அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் உங்கள் கருத்துகளை சொல்ல வேண்டும்" என்றார்.
அதைத்தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:
அவை முன்னவர் செங்கோட்டையன்: 140 கோடி மக்கள் ஏற்று கொண்ட தேசிய கீதத்தை 2 முறைபாடியது வரவேற்கத்தக்கது.
எதிர்க்கட்சி கொறடா எ.வ.வேலு: மாநில உரிமைகளை பறிக்கும் அளவுக்கு பல்வேறு குளறுபடிகளை முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த அவையில் செய்தார். ஒரு முறை தேசிய கீதம் பாடப்பட வேண்டிய இந்த பேரவையில் 2 முறை தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. நீங்கள் நேற்று அளித்த புத்தகத்தில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, இறுதியில்தான் தேசிய கீதம் என்று உள்ளது.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: ஆளுநர் கட்டுப்பாட்டில் 2 முறை பதவியேற்பு விழாக்கள் நடந்தபோது, மாநில அரசால் எந்த முயற்சியும் செய்ய முடியவில்லை. ஆனால் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின்போது, அண்ணா உருவாக்கிய மாநிலக் கொள்கையில் உறுதியாக இருந்து, ஆளுநரிடம் அதுகுறித்து விளக்கம் அளித்து, எந்த ஆளுநர் புறக்கணித்தாரோ, அவர் முன்பே முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
திமுக எம்எல்ஏ ஆஸ்டின்: தமிழக சட்டப்பேரவையில் கடைபிடிக் கப்படும் சில மரபுகளை மாற்ற முன்னாள் ஆளுநர் பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அவை முறியடிக்கப்பட்டன. ஆனால், இப்போது புதிய ஆளுநர் மரபை மாற்றி, வெற்றிபெற்றுவிட்டார். ஆளுநர் அழுத்தத்துக்கு இந்த அரசு பணிந்துவிட்டது.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: எந்த மரபும் மீறப்படவில்லை. எந்த அழுத்தத்துக்கும் பணியவில்லை. தமிழக மக்கள் தேசிய கீதத்தை மதிப்பவர்கள். அந்த வகையில் தேசிய கீதத்துக்கு நாம் மரியாதை கொடுத்துள்ளோம்.
இந்த விவகாரத்தை மடைமாற்றம் செய்யாதீர்கள். திமுக மற்றும் அண்ணாவின் கொள்கை களைத்தான் நாங்கள் உறுதியாகப் பின்பற்றுகிறோம். நாங்கள் மாநில சுயாட்சியில் உறுதியாக இருக் கிறோம். இவ்வாறு விவாதம் நடந்தது.