

கிரிஷ் சோடங்கர்
“புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் 14 இடங்களை காங்கிரஸுக்கு ஒதுக்க திமுக முன்வந்திருக்கிறது. இது வழக்கமான மரபு இல்லை என்பதால் தொடர்ந்து பேசி வருகிறோம்" என, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கிரிஷ் சோடங்கர், "தற்போது இது மிகவும் முக்கியமான தருணம் என்று நான் நினைக்கிறேன். திமுக, காங்கிரஸ் இடையே இடங்களை பங்கிட்டுக் கொள்வது தொடர்பான விவாதம் நீண்ட காலமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் கூட்டணியை திமுக வழிநடத்தும், புதுச்சேரியில் காங்கிரஸ் வழிநடத்தும் என்ற வழக்கமான அணுகுமுறையுடன்தான் நாங்கள் பேசத் தொடங்கினோம்.
கடந்த கால வழிமுறைப்படி, காங்கிரஸ் 21 இடங்களிலும், திமுக 9 இடங்களிலும் போட்டியிட வேண்டும். ஆனால் இந்த முறை, முக்கியமான தொகுதிகள் திமுக-வுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் திமுக-வும், புதுச்சேரியில் காங்கிரஸும் கூட்டணிக்கு தலைமை தாங்குவது என்பது எப்போதும் இருந்து வரும் மரபாகும்.
எனவே, இது குறித்து எங்களது உள்ளூர் குழுவும், அவர்களது உள்ளூர் குழுவும் தொடர்ந்து ஆலோசித்து வருகின்றனர். அவர்கள் தற்போது சுமார் 14 தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்கிவிட்டு, எஞ்சிய 16 தொகுதிகளில் மூன்றை கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்க முன்வந்துள்ளனர்" என்றார்.