

மதுரை/ காரைக்குடி: திருப்பரங்குன்றத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்த புகாரில் திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் காரைக்குடியில் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பறித்துச்சென்ற கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிவதாலும், வாக்குப்பதிவுக்கு 2 நாட்களே இருப்பதாலும் பல இடங்களில் வாக்காளர்களுக்கு கட்சியினர் பணம் வழங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது.
திருப்பரங்குன்றம் பாம்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் திமுக தொண்டரணி அமைப்பாளர் நாகலிங்கம். இவர் கோடாங்கித் தோப்பு தெருவில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அப்பகுதிக்குச் சென்ற பறக்கும் படையினர், நாகலிங்கத்தை பிடித்து ரூ.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
பின்னர், அவரையும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தையும் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். நாகலிங்கம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோல் காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. அலுவலகத்தில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக பணம் வைத்திருப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து, வட்டாட்சியர் தர்மலிங்கம் தலைமையிலான தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் அங்குசென்றனர்.
தொடர்ந்து அலுவலகத்தில் அவர்கள் சோதனையிட்டபோது, கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, எடுத்துச் செல்ல முயன்றனர். அப்போது அங்கிருந்த பழனியப்பன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பணத்தை முறையாக எண்ணி, எவ்வளவு எடுத்துச்செல்கிறோம் என்று தெரிவிக்க வேண்டுமெனத் கோரினர்.
இதைத் தொடர்ந்து காரில் வைத்து அதிகாரிகள் பணத்தை எண்ணினர். அதில் ரூ.13.40 லட்சம் இருந்தது. அப்போது அங்கிருந்த காங்கிரஸார் இது எம்.பி. அலுவலகத்தில் பல்வேறு செலவுகளுக்காக வைத்திருந்த பணம், அதை எப்படி எடுத்துச் செல்லலாம் என்று வாக்குவாதம் செய்தனர்.
அதேசமயத்தில் அதிகாரிகளிடமிருந்த பணத்தைப் பறித்து கொண்டு இருவர் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். மேலும், அவர்களை விரட்டிப் பிடிக்க அதிகாரிகள் காரை எடுக்க முயன்றபோது தப்பி ஓடியவர்கள் கார் சாவியையும் எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதனால் அதிகாரிகள் செய்வதறியாமல் தவித்தனர். தவலறிந்து வந்த காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்புனியா, வட்டாட்சியர் ராஜா ஆகியோர் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து வட்டாட்சியரின் புகாரின்பேரில், காரைக்குடி வடக்கு போலீஸார் வழக்குப் பதிந்து, அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த பழனியப்பனை பிடித்து விசாரித்தனர்.
தப்பியோடியவர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர். இதனிடையே மாவட்ட எஸ்பி சிவபிரசாத் விசாரணை செய்தார். மேலும் அவர் கூறுகையில், தேர்தல் அதிகாரிகள் வாகன கேமராவில் பதிவான காட்சி அடிப்படையில் பணத்தைப் பறித்துச்சென்ற நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
அரூர் ரூ.22 லட்சம்
இந்நிலையில் தருமபுரி மாவட்டம் அரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட அரூர் அம்பேத்கர்நகர் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் பறக்கும் படையினர் ரோந்து சென்றனர். அப்போது அவர்களைக் கண்டு ஓட்டம் பிடித்த 20 பேர் கொண்ட கும்பல்விட்டுச் சென்ற இருசக்கர வாகனத்தில் ரூ.22 லட்சத்து 3 ஆயிரம் இருந்தது.
இதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பணம் மற்றும் இருசக்கர வாகனம் அரூர் கோட்டாட்சியர் செம்மலையிடம் ஒப்படைக்கப்பட்டது.