

சென்னை: காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ( டிச.21 ) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டம் வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் குறித்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடர்ந்து வெளியிடப்பட்ட அந்த வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது. இதனால், கடந்த அக்.27-ம் தேதி நிலவரப்படி, 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது 5.44 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 6 மணியளவில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.
அதுபோது, மாவட்டக் கழக செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தக் கூட்டம் வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் குறித்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்துவரும் சூழலில், வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் குறித்து நடைபெறும் இக்கூட்டம் கவனம் பெறுகிறது.