

பேரவையில் முதல்வர் விஜய்
சென்னை: “ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்ற அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். புதிய வாகனம் வாங்குவோர் டிஜிட்டல் ஆர்சி-யை (வாகனப் பதிவுச் சான்றிதழ்) இணையம் வழியாகப் பதிவிறக்கம் செய்யலாம்” என்பன உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை முதல்வர் விஜய் இன்று சட்டப்பேரவையில் வெளியிட்டார்.
போக்குவரத்து அலுவலகத்தின் சேவைகள் குறித்து சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் தமிழக முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்புகளின் விவரம்: புதிய வாகனம் வாங்குவோர் டிஜிட்டல் பதிவுச் சான்றிதழ் (digital registration certification) இணையம் வழியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாநிலம் முழுவதும் 15.09.2026 முதல் இந்த வசதி ஏற்படுத்தப்படும்.
ஓட்டுநர் தேர்வில் (Driving Test) தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். இந்த வசதி மாநிலம் முழுவதும் 15.09.2026 முதல் நடைமுறைப்படுத்தப்படும். போக்குவரத்து சம்பந்தமான அனைத்து அலுவலக சேவைகளுக்கும் “Anywhere Registration /Licensing” என்ற முறையில் வசதிகள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும்.
ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்கள் டிஜிட்டல் முறையில் வழங்கும் வசதி ஏற்படுத்தப்படும். அரசு அலுவலகங்கள் மற்றும் பிற அதிகாரப்பூர்வ அமைப்புகள் கியூ ஆர் கோடினை ஸ்கேன் செய்து மின்னணு முறையில் ஆவணங்களை சரிபார்க்க முடியும்.
டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கும் முறையினால், ஆவணம் தொலைந்தாலோ, சேதமடைந்தாலோ மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ளவும், அச்சிட்டுக் கொள்ளவும் முடியும்.” எனத் தெரிவித்துள்ளார்.