

திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோயில். (கோப்புப்படம்)
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த ஆந்திர மாநில பக்தர் ஒருவர் இடுக்கு பிள்ளையார் கோயிலுக்குள் சென்ற போது மூச்சு திணறி உயிரிழந்தார்.
திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள முக்கிய கோயில்களில் இடுக்கு பிள்ளையார் கோயில் உள்ளது. இதனை மோட்ச துவாரம் என கூறப்படுகிறது. இக்கோயிலில் சிறிய குகை போன்ற அமைப்பில் உள்ளது. இக்கோயிலின் பின் வாசல் வழியாக ஒருக்களித்து படுத்தவாறு உள்ளே நுழைந்து, கைகளை ஊன்றியவாறு நகர்ந்து முன் வாசல் வழியாக வெளியே வரவேண்டும்.
குகை போன்ற பகுதியில் இருந்து வெளியே வந்தவுடன் நந்தி இருக்கும். பக்தர்கள் நந்தி பகவானையும், இடுக்கு பிள்ளையாரையும் வணங்கி செல்வது வழக்கம். கிரிவலம் வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இடுக்கு பிள்ளையார் கோயிலில் நுழைந்து வெளியே வந்து வழிபட்டுச் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திரவரத்தைச் சேர்ந்த வெங்கடேசலு மகன் தாசரிமணிகுமார் (36) என்பவர் தனது குடும்பத்தினருடன் கிரிவலம் வந்துள்ளார். பின்னர் நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் இடுக்கு பிள்ளையார் கோயிலுக்கு வந்துள்ளனர். அப்போது,தாசரி மணிகுமார் குகை வடிவத்தில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோயிலுக்குள் நுழைந்துள்ளார். இவர், சற்று உடல் பருமன் அதிகமாக இருந்ததால் இவரால் குகை போன்ற பகுதியில் இருந்து வெளியே வர முடியாமல் சிரமத்துக்குள்ளாகி மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார்.
அப்போது, அங்கிருந்த பக்தர்கள் மற்றும் அவரது உறவினர்கள் கொயிலுக்குள் இருந்தவரை வெளியே மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருவண்ணாமலை கிராமிய காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச் சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.