

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவர் டெங்கு காய்ச்சலில் உயிரிழந்ததாக நேற்று தகவல் வெளியானதால் அதிர்ச்சி ஏற்பட்டது. பொதுமக்கள் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்து உஷாராக இருக்கும்படி அரசு அறிவுறுத்தி உள்ளது.
பருவநிலை மாற்றத்தால் டெங்கு காய்ச்சலை பரப்பும் ‘ஏடிஸ் -எஜிப்டை’ வகை கொசுக்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்படுபவர் களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டில் இதுவரை 16,500-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதால், தடுப்பு நடவடிக்கைகளைச் சுகாதாரத் துறை தீவிரப்படுத்தி உள்ளது. அரசு மருத்துவமனைகளில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க பிரத்யேக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. போதிய மருந்துகளை இருப்பில் வைத்திருக்குமாறு அனைத்து மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தங்கிப் படித்து வந்த மாணவர் ஹரிஷ் குமார் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அந்த மாணவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது.
இதை மறுத்துள்ள மருத்துவ மனை நிர்வாகம், ‘‘ஹரிஷ் குமார் சுயநினைவு இல்லாத நிலையில் அவருடைய நண்பர்கள் சிகிச்சைக்கு அழைத்து வந்தனர். அவருக்கு ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
பரிசோதனை முடிவில் அவருக்கு டெங்கு பாதிப்பு ஏதும் உறுதி செய்யப்படவில்லை. அவர் ஒருவித தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். காய்ச்சல் பாதிப்புக்கு முறையாக சிகிச்சை பெறாமலும், தண்ணீர் கூட குடிக்காமலும் இருந்துள்ளார்.
இதனால் அவருடைய நுரையீரல் செயலிழந்து விட்டது. அடுத்தடுத்து ஒவ்வொரு உடல் உறுப்பாகச் செயல் இழந்ததால், அந்த மாணவர் உயிரிழந்தார். காய்ச்சல் பாதித்த உடனே மாணவரை மருத்துவமனையில் சேர்த்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம்’’ என்று தெரிவித்தனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஆனந்த் ராஜ் என்பவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாகவும், அண்ணா பல்கலைக்கழ கத்தில் மேலும் பல மாணவர் களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட் டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் கடந்த 14-ம் தேதி நிலவரப்படி 61 பேர், 15-ம் தேதி 133 பேர், 16-ம் தேதி 283 பேர் என பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த எண்ணிக்கை 17-ம் தேதி 244 ஆக குறைந்துள்ளது. மற்ற மாநிலங்களிலும் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது.
பருவகால மாற்றத்தால் வரக்கூடிய காய்ச்சல் என்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. சுகாதாரத் துறை அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரமாக எடுத்து வருகிறது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். தினமும் காய்ச்சல் பதிவு விவரங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. டெங்கு கொசு ஒழிப்பு பணியில் மக்களின் ஒத்துழைப்பும் தேவை. வருமுன் காப்பதுதான் சிறந்தது என்பதால், வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீடு வீடாகச் சென்று, தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்துமாறு கொசு ஒழிப்புப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழைநீர் தேங்கியிருந்த தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே முதல் கட்டமாக 2,500 செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்பட்டுள்ளது. படிப்படியாக அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். மாவட்ட நலச் சங்கம் மூலமாக ஒப்பந்த அடிப்படையிலும் செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
விழித்திரை காப்போம் திட்டம்: முன்னதாக, சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை யில், ‘விழித்திரை காப்போம்’ திட்டத்தின் அறிமுக நிகழ்வு நேற்று நடந்தது. இதில் சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் பங்கேற்றார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஆரம்ப நிலையிலேயே விழித்திரை மற்றும் பார்வையைப் பாதிக்கக் கூடிய நோயைக் கண்டறிந்து, உயர் சிறப்பு சிகிச்சை வழங்கும் நோக்கில், ‘விழித்திரை காப்போம்’ திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள 385 வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 37 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 150 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு பொது மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்குநர் (பொ) லோகநாயகி, மருத்துவமனை இயக்குநர் நாயகமூர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை: தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகச் சுகாதாரத் துறைக்குப் புகார்கள் வந்ததால், தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘தனியார் மருத்துவமனைகளில் சூழலைப் பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணத்தில் இருந்து மாறுபட்டிருந்தால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால், காய்ச்சலுக்குச் சிகிச்சை அளிப்பதற்குத் தடை விதிக்கப்படும். தனியார் மருத்துவமனைகளில், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகத் தெரிந்தால் 104 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்” என்றனர்.