

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் ஈரமாக இருந்த நெல்மணிகளை சாலையில் கொட்டி உலரவைக்கும் பணியில் ஈடுபட்ட விவசாயி. (கோப்பு படம்)
தஞ்சாவூா்: நெல் ஈரப்பத தளர்வு குறித்த தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில் 6.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றது. சாகுபடி செய்யப்பட்ட நெல் கடந்த செப்டம்பர் மாதம் முதல் அறுவடை செய்யப்பட்டு வந்தது.
இதையடுத்து, அக். 16-ம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. ஆனால், அன்று முதல் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால், நெல் அறுவடைப் பணி வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்து காணப்பட்டது.
எனவே, நெல்லின் ஈரப்பத அளவை 17-ல் இருந்து 22 சதவீதமாக அதிகரித்து கொள்முதல் செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதேபோல, மாநில அரசும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. இதையடுத்து, மத்திய குழுவினர் டெல்டா மாவட்டங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து கள ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், ஈரப்பத தளர்வை மத்திய அரசு நிராகரித்து விட்டதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எல்.பழனியப்பன் வெளியிட்ட அறிக்கையில், “நெல்லின் ஈரப்பத தளர்வு குறித்து மத்திய அரசு அறிவிக்காதது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஒவ்வொரு முறையும் ஈரப்பதம் தளர்வு கோரும்போதெல்லாம், மத்திய குழு ஆய்வுக்கு வருவது சம்பிரதாயமாகவே உள்ளது. அதற்கான செலவில், பல நெல் உலர் இயந்திரங்களை வாங்கலாம்” என்று தெரிவித்துள்ளார். தமிழக விவசாயிகள் சங்க டெல்டா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.ஜெகதீசன் கூறும்போது, “விவசாயிகள் வேண்டுமென்றே நெல்லில் ஈரப்பதத்தை அதிகரிப்பதில்லை. இயற்கை காரணங்களால் ஈரப்பதம் அதிகரிப்பதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
ஆனால், மத்திய அரசு 17 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளது. இது ஒட்டுமொத்த விவசாயிகளையும் ஏமாற்றும் செயலாகும்” என்றார். தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே.எஸ்.முகமதுஇப்ராஹிம் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசு நெல் கொள்முதல் செய்யும்போது, ஈரப்பதம் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தையும் தமிழக அரசுக்கே வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கமாநிலப் பொதுச் செயலாளர் சாமி நடராஜன் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்திய பல நாட்களுக்குப் பின்னர் ஈரப்பத அளவை உயர்த்த மத்திய அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது கண்டனத்துக்குரியது.
கோவையில் நடைபெற்ற இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்ற நிலையில், நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி கொள்முதல் செய்வதற்கு அனுமதி மறுத்திருப்பது தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசு செய்யும் துரோகமாகும்” என்று தெரிவித்துள்ளார்.