போரூர் - பூந்தமல்லி இடையேயான வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையில் தாமதம்

போரூர் - பூந்தமல்லி இடையேயான வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையில் தாமதம்
Updated on
2 min read

சென்னை: இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில், 4-வது வழித்​தடத்​தில் ஒரு பகு​தி​யான போரூர் - பூந்​தமல்லி வரையி​லான பாதை​யில்ரயில் மற்​றும் வழித்​தடத்​துக்​கான பாது​காப்பு சான்​றிதழுக்​காக, இந்​திய ரயில்வே ஆராய்ச்சி வடிவ​மைப்பு மற்​றும் தர நிர்ணய அமைப்​பின் (ஆர்​.டி.எஸ்​.ஒ.) சோதனை நிறைவடைந்​து, இது​வரை​யில் ரயில்வே வாரி​யத்​திடம் இருந்து ஒப்​புதல் கிடைக்​க​வில்​லை.

இதனால், இப்​பாதை​யில் முதல் ஓட்​டுநர் இல்​லாத மெட்ரோ ரயில் சேவை தொடங்​கு​வ​தில் தாமத​மாகும் நிலை ஏற்​பட்​டுள்​ளது. சென்​னை​யில் இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டம் ரூ.63,246 கோடி மதிப்​பில் 116.1 கி.மீ. தொலை​வில் 3 வழித்​தடங்​களில் செயல்​படுத்​தப்​படு​கிறது. இவற்​றில் கலங்​கரை விளக்​கம் - பூந்​தமல்லி பைபாஸ் வரையி​லான 4-வது வழித்​தடம் ஒன்​றாகும்.

இத்​தடத்​தில், கலங்​கரை விளக்​கம் முதல் கோடம்​பாக்​கம் மேம்​பாலம் வரை சுரங்​கப்​பாதை​யாக​வும், கோடம்​பாக்​கம் பவர்​ஹவுஸ் முதல் பூந்​தமல்லி பைபாஸ் வரை உயர்​மட்​டப் ​பாதை​யாக​வும் அமை​கிறது. 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலை​யங்​களும், 18 உயர்​மட்ட மெட்ரோ ரயில் நிலைங்​களும் இடம்​பெற உள்​ளன. தற்​போது, பல்​வேறு இடங்​களில் சுரங்​கப்​பாதை, உயர்​மட்​டப்​பாதை பணி​கள் தீவிர​மாக நடை​பெறுகின்​றன.

இத்​தடத்​தில் ஒரு பகு​தி​யான, பூந்​தமல்லி - போரூர் சந்​திப்பு மெட்ரோ ரயில் நிலை​யம் வரை 10 கி.மீ. தொலை​வுக்கு பாதை அமைக்​கும் பணி முழு​வீச்​சில் நடை​பெற்று வந்​தது. ஏனெனில், இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தின் முதல் ஓட்​டுநர் இல்​லாத மெட்ரோ ரயில் சேவை இப்​பாதை​யில் இந்த மாதத்​தில் தொடங்க ஏற்​கெனவே திட்​ட​மிடப்​பட்​டிருந்​தது.

அதன்​படி, ரயில் தண்​ட​வாளம் அமைத்​து, ஓட்​டுநர் இல்​லாத ரயில்​களின் சோதனை ஓட்​ட​மும் நடை​பெற்று வந்​தது. இதற்​கிடை​யில், இத்​தடத்​தில் மெட்ரோ ரயில் மற்​றும் வழித்​தடத்​துக்கு பாது​காப்பு சான்​றிதழ் பெறு​வதற்​கான சோதனையை இந்​திய ரயில்வே ஆராய்ச்சி வடிவ​மைப்பு மற்​றும் தர நிர்ணய அமைப்பு (ஆர்​.டி.எஸ்​.ஒ.) ஆக.16-ம் தேதிமுதல் ஒரு வாரத்​துக்கு மேல் நடத்​தி​யது.

அப்​போது, மணிக்கு 90 கி.மீ. வேகத்​தில் மெட்ரோ ரயில் இயக்​கப்​பட்டு பயணி​களின் பயண வசதி மதிப்​பீடு செய்​யப்​பட்​டது. அத்​துடன், வழித்​தடத்​தில் ரயில்​களின் இழுவை மற்​றும் பிரேக்​கிங் செயல்​திறன் பற்​றிய விரி​வான சரி​பார்ப்​பும் செய்​யப்​பட்​டது.

இதன்​பிறகு, பாது​காப்பு சான்​றிதழ் விரை​வில் கிடைத்​து ​விடும் என்​றும், அடுத்தகட்ட நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும் என்​றும் எதிர்​பார்க்​கப்​பட்​டது. ஆனால், தற்​போதுவரை மெட்ரோ ரயில்​கள் மற்​றும் வழித்​தடங்​களுக்​கான பாது​காப்பு சான்​றிதழை ரயில்வே வாரி​யம் வழங்​க​வில்​லை.

இதன் காரண​மாக, ஓட்​டுநர் இல்​லாத மெட்ரோ ரயில் சேவை தொடங்​கு​வ​தில் தாமத​மாகும் நிலை ஏற்​பட்​டுள்​ளது. இதுகுறித்​து, சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் உயர​தி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: இப்​பாதை​யில் கடந்த ஆகஸ்​டில் இந்​திய ரயில்வே ஆராய்ச்சி வடிவ​மைப்பு மற்​றும் தர நிர்ணய அமைப்​பினர் சோதனை நடத்​தினர்.

இக்​குழுவினர், ரயில்வே வாரி​யத்​துக்கு அடுத்​தகட்ட நடவடிக்கை மேற்​கொள்ள பரிந்​துரை செய்​துள்​ளனர். இதற்கு ஒப்​புதல் அளித்​து, பாது​காப்பு சான்​றிதழை ரயில்வே வாரி​யம் தர வேண்​டும். ரயில்வே வாரி​யம் ஒப்​புதல் அளித்த பிறகே, பெங்​களூரு​வில் உள்ள மெட்ரோ ரயில்வே பாது​காப்பு ஆணை​யர் வந்​து, இப்​பாதை​யில் சோதனை ஓட்​டம் உட்பட பல்​வேறு சோதனை​களை நடத்தி ஆய்வு செய்​வார்.

ஏதாவது திருத்​தம் இருந்​தால், ரயில்வே பாது​காப்பு ஆணை​யர் தெரி​விப்​பார். இல்​லைஎனில், இப்​பாதை​யில் ரயில் இயக்​கலாம் என்று அறிக்கை சமர்ப்​பிப்​பார். இச்​செயல்​முறை​கள் முடிந்​து, விரை​வில் ஓட்​டுநர் இல்​லாத மெட்ரோ ரயில் சேவை தொடங்​கும் என்று எதிர்​பார்க்​கிறோம். தற்​போது, இப்​பாதை​யில் 95 சதவீதம் பணி​கள் முடிந்​து​விட்​டன. ஓரிரு இடங்​களில் இறு​தி​கட்ட பணி​கள் தீவிரமாக நடை​பெறுகின்​றன.

இப்​பாதை​யில் ஓட்​டுநர் இல்​லாத மெட்ரோ ரயில் சேவையை இயக்க தயா​ராக இருக்​கிறோம். இதற்காக நாங்கள் ரயில்வே வாரியத்துடனும் மெட்ரோ ரயில்வே பாதுகாப்பு ஆணையரகத்துடனும் பேசி வருகிறோம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

போரூர் - பூந்தமல்லி இடையேயான வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையில் தாமதம்
மாநகராட்சியின் நவீன மாடுகள் காப்பகம் பராமரிப்பு: தொண்டு நிறுவனங்கள் விருப்ப கடிதம் கொடுக்கலாம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in