

சென்னை: “நாகர்கோவிலில் உயிரிழந்த விசாரணைக் கைதி சபரிவர்மனின் குடும்பத்தினருக்கு இதுவரை அமைச்சரோ, முதல்வரோ ஓர் ஆறுதல் கூட சொல்லவில்லை, எந்த நிவாரணமும் அறிவிக்கவில்லை. இப்பொழுது நடக்கும் விசாரணை மீது நம்பிக்கை இல்லாமல், இதனை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என சபரிவர்மன் குடும்பத்தினர் கோரிக்கை வைக்கின்றனர்” என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்தார்.
நாகர்கோவில் கிளைச்சிறையில் உயிரிழந்த விசாரணைக் கைதி சபரிவர்மனின் குடும்பத்தினரைச் சந்தித்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி, “மிக சாதாரணமாக வாழ்ந்து கொண்டிருந்த ஒரு மாற்றுத்திறனாளி சகோதரர் சபரிவர்மன் காவல் துறையால் என்ன காரணம் என்று யாருமே புரிந்து கொள்ள முடியாத வகையில் அழைத்துச் செல்லப்பட்டு, பிறகு காவல் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்.
மறுபடியும் 'ரிமாண்ட் பண்ணிட்டாங்க' என்று சொல்லி அவரை கொண்டு சென்று சிறையில் வைத்துள்ளனர். அவரின் குடும்பத்தினர் சென்று சந்தித்தபோது அவர் உடல் நலத்தோடு அவர்களுடன் பேசி இருக்கிறார். இந்த சூழலில் , திடீர் என்று 'அவரை கொண்டு போய் ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கோம்' என காவல் துறையில் இருந்து ஒரு தகவல் அவங்களுக்கு தரப்படுகிறது.
அவர்கள் சென்று பார்க்கும் பொழுது அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறி உள்ளனர். அந்த மருத்துவமனையில் அவர் கொண்டுவரப்பட்ட போதே இறந்துவிட்டிருந்தார் என்றுதான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல 19 இடத்தில் அவர் தாக்கப்பட்டு, அவருடைய கை எலும்புகள் எல்லாம் முறிந்திருக்கக்கூடிய ஒரு நிலையில், குடும்பத்தினர் போராட்டம் நடத்திய பிறகுதான், அத்தனை அரசியல் கட்சிகளும் அவரின் குடும்பத்தாருடன் இணைந்து போராடிய பிறகுதான், இந்த அரசு பிரச்சினை மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது.
இதுவரை இந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய அமைச்சரோ, அரசின் சார்பிலோ யாருமே இந்த குடும்பத்தில இருக்கக்கூடியவர்களுக்கு ஒரு ஆறுதல் வார்த்தை கூட சொல்ல முன் வரவில்லை. அவங்ககிட்ட என்ன நடந்தது என்று வந்து கேட்க கூட இல்லை. இப்படிப்பட்ட ஒரு சூழல்ல அந்த குடும்பத்திற்கு 'அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை' என்று சொல்லக்கூடிய நிலையில் இந்த விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும். இந்த அரசு மேல எனக்கு நம்பிக்கை இல்லை' என்று அவரின் குடும்பத்தை சேர்ந்த அவருடைய சகோதரியும், அவருடைய மனைவியும் திரும்ப திரும்ப சொல்கிறார்கள்.
அவர்களுக்கு எந்த நிவாரணமும் இதுவரைக்கும் அறிவிக்கப்படவில்லை. அவருடைய மனைவி படித்திருக்கிறார்கள், அவர்களுக்கு அரசு வேலை தருகிறார்களா, இல்லையா என்பது பற்றி கூட அரசு வாய் திறந்து இதுவரைக்கும் பேசவில்லை. அரசு சார்பில் ஒரு அமைச்சர், முதல்வர் உட்பட யாருமே வாய் திறந்து அந்த குடும்பத்திற்கு ஓர் ஆறுதல் வார்த்தை கூட சொல்லவில்லை. இந்தச் சூழலில் உண்மை என்ன என்பதை விசாரிக்க வேண்டும்.
எப்படி ஹாஸ்பிடல் கொண்டு வரப்பட்ட ஒருத்தருக்கு, யாரிடமுமே கேட்காமல் போஸ்ட்மார்ட்டம் செய்தார்கள். அந்த குடும்பத்துக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருக்கிறது. வந்து 'உடலை வாங்குவதற்கு கையெழுத்து போட வேண்டும்' என்று சொல்லி வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இறந்தவரின் உடல்நிலை சரியில்லாத தந்தைக்கு உடலை வாங்க அழுத்தம் தந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த தெருவில் இருப்பவர்கள் எல்லோருமே எங்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் இருக்கிறோம் என்கிறார்கள். இன்னமும் அரசின் சார்பிலே எந்த அமைச்சரோ, முதல்வரோ அவர்களுக்கு ஒரு ஆறுதல் வார்த்தை கூட சொல்லவில்லை, அவர்களுக்கு எந்த நிவாரணத்தையும் அறிவிக்கவில்லை, அவர்களுக்கு ஒரு நியாயமும் கிடைக்கவில்லை.
இதற்கு அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். ஆனால், தொடர்ந்து யார் மேலாவது பழி போடுவதற்கு தான் வந்து நிற்கிறார்களே தவிர, வேறு எதற்கும் பொறுப்பேற்க தயாராக இல்லை. இதுவரைக்கும் அவர்களுக்கு என்ன நிவாரணம் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. நடவடிக்கை எடுப்பதற்கு கூட இவ்வளவு தயக்கம் ஏன்? எல்லாமே மூடு மந்திரமாக இருக்கக்கூடிய சூழல் இருப்பதாக குடும்பமே வந்து அச்சப்படுகிறது. இந்த வழக்கே பொய் வழக்கு என குடும்பத்தினர் கூறுகின்றனர். வேறு யாரையோ காப்பாற்றுவதற்காக தான் அவர் மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது என்று உறுதியாக அவர்கள் நம்புகிறார்கள்.
19 காயங்களால் அவர் உயிரிழக்கவில்லை என்பது போல அறிக்கை இருப்பதாக சொல்கிறார்கள். 'அந்த காயத்தால் உயிரிழப்பு இல்லை' என்று சொல்கிறார்கள், அப்படி என்றால் உயிரிழப்புக்கு காரணம் என்ன? மிக மோசமாக தாக்கப்பட்டிருக்கிறார், ஒரு கையில் அவருக்கு மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தலை தாக்கப்பட்டுள்ளது. உடல் முழுவதும் அவருக்கு காயங்கள் இருக்கிறது.
அப்படி இருக்கக் கூடிய ஒரு சூழ்நிலையில் என்ன காரணத்தால் அவர் இறந்தார் என்பதை போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெளிவாக சொல்லி இருக்க வேண்டும். ஆனால், அதையும் சொல்லவில்லை. ஆகவே இறந்தவரின் குடும்பம் இப்பொழுது நடந்து கொண்டிருக்கக்கூடிய விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை, இதை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை வைக்க தொடங்கி இருக்கிறார்கள். விசாரணை எதுவும் தெளிவில்லாமல், காவல் துறை சொல்லக்கூடிய தகவல்கள் உண்மைக்கு புறம்பான ஒன்றாகவே உள்ளது” என்றார்.