

சென்னை: காகங்கள் இறப்பது தொடர்ந்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
சென்னை அடையாறு பகுதியில் கடந்த ஜன.5-ம் தேதி காகங்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இறந்த காகங்களின் மாதிரிகளை ஆய்வு செய்த, மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம்,பறவை காய்ச்சலால் காகங்கள் இறந்ததை உறுதி செய்தது. அதைத்தொடர்ந்து, தடுப்பு நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலுார் உள்ளிட்ட 14 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலும் காகங்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றன. இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “தமிழகத்தில் 14 மாவட்டங்களில் பறவை காய்ச்சலால் காகங்கள் உயிரிழந்தாலும், மற்ற பறவைகளுக்கோ, மனிதர்களுக்கோ பாதிப்பு கண்டறியப் படவில்லை.
காகங்கள் உயிரிழப்பது தொடர்ந்து வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். உயிரிழக்கும் பறவைகளை வெறும் கையால் தொட்டு அப்புறப்படுத்தக் கூடாது. காய்ச்சல் இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும்” என்று தெரிவித்தனர்.