

புதுச்சேரி: புதுச்சேரி - உப்பளம் துறைமுக வளாகத்தில் தவெக பொதுக் கூட்டத்துக்காக இன்று காலை முதல் தொண்டர்கள் குவிந்திருந்தனர்.
கியூஆர் கோடு பாஸ் இல்லாதவர்களும் பொதுக் கூட்ட இடத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியும் கலைந்து செல்லாமல் விஜய்யை பார்ப்பதற்காக நின்றிருந்தனர்.
இதனால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. போலீஸாரை தள்ளி அவர்கள் கூட்ட வளாகத்துக்கள் நுழைய முயன்றனர். இதனையடுத்து போலீஸார் தடியை சுழற்றி தரையில் அடித்தும், சிலரை லேசாக அடித்தும் கலைந்து போக செய்தனர்.
இதையறிந்த பொதுச் செயலாளர் ஆனந்த், “யாரும் காவல் துறையினருக்கு சிரமம் தர வேண்டாம். பாஸ் உள்ளவர்கள் முதலில் வாருங்கள். அதன்பின் வரிசையாக தொண்டர்கள் வந்தால் பொதுக் கூட்டத்துக்கு அனுமதிப்போம்.
காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தலைவர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம்” என மைக்கில் பேசி தொண்டர்களை சமாதானப்படுத்தினார்.
கடும் நெரிசல்: பொதுக் கூட்டம் காரணமாக ஏராளமான தொண்டர்கள் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து வந்தனர். இதனால் தவெக பொதுக் கூட்டம் நடைபெறும் பகுதியில் நெரிசல் ஏற்பட்டது.
கூட்டம் நடைபெறும் பகுதி வழியாக மக்கள் செல்ல போலீஸார் கட்டுப்பாடு விதித்தனர். போலீஸார் உடன் அவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.