மதுரை: திருப்பரங்குன்றம் வழக்கின் பிரதான மேல்முறையீடு மனு விசாரணையை டிச. 12-க்கு தள்ளிவைத்த நீதிபதிகள், நீதிமன்ற தீர்ப்புகளை பொதுவெளியில் தேவையில்லாமல் விமர்சிப்பதை ஏற்க முடியாது என்று எச்சரித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக் கோரி ராம.ரவிக்குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தனி நீதிபதி, மலை உச்சியில் உள்ள தீபத்தூணிலும் தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.
இதை ரத்து செய்யக் கோரி மதுரை ஆட்சியர், திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் ஆகியோர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
அதில், “தீபத்தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டுமென உரிமை கோர தனி நபருக்கு சட்ட உரிமை இல்லை. தீபத்தை எங்கு ஏற்றுவது என்பது குறித்து தேவஸ்தானம் மட்டுமே முடிவெடுக்க இயலும்.
இதை 1994-ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு உறுதி செய்கிறது. தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட்டதற்கான ஆவணங்களோ, கல்வெட்டுகளோ, ஆகம தரவுகளோ இல்லை. கோயிலின் வழக்கங்களை மாற்ற தனிநபருக்கு உரிமை கிடையாது.
மலையில் உள்ள தீபத்தூண் இதற்கு முன்பாக மதப் பிரச்சினை உருவான, பிரச்சினைக்குரிய எல்லைக்குள் உள்ளது. இவற்றைக் கருத்தில் கொள்ளாமல் தீபத்தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராம கிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், “இந்த விவகாரம் தொடர்பாக ஏராளமான மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பலர் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர்” என்றனர்.
அதற்கு அரசுத் தரப்பில், “இந்த வழக்கு முக்கியமானது. எனவே, புதிதாக இடையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டாம். விசாரணையை டிச. 12-க்கு தள்ளி வைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், “இந்த வழக்கு தொடர்பாக விருப்பம் உள்ளவர்கள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யலாம். அனைத்து மனுக்களும் டிச. 12-ல் விசாரிக்கப்படும்” என்றனர்.
தொடர்ந்து அரசு வழக்கறிஞர்கள், “திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தேவையற்ற விவரங்கள் பகிரப்படுவதை தடுக்க நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும்” என்று கோரினர்.
அதற்கு நீதிபதிகள், “நீதிமன்றமும், நீதிபதிகளும் எதுவும் சொல்லவில்லை என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என நினைக்க வேண்டாம்.
இந்த நீதிமன்றம்தான் அனைத்துக்கும் கடைசி நிவாரணம். தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகள் குறித்து பொதுவெளியில், சமூக ஊடகங்களில் தேவையில்லாமல் விமர்சனங்கள் செய்வதை ஏற்க முடியாது” என உத்தரவிட்டனர்.