

குறுவை விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி, நாகை ஆட்சியர் அலுவலக முகப்பு வாயில் அருகில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.
நாகப்பட்டினம்: காவிரியில் தண்ணீர் வராததால் பாதிக்கப்பட்ட குறுவை விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி, நாகை ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இதனால் ஆட்சியர் அலுவலக பிரதான கதவுகள் 3 மணி நேரத்துக்கும் மேலாக மூடப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்படாததால் பாதிக்கப்பட்ட குறுவை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15,000 நிவாரணம் வழங்க வேண்டும். கர்நாடக அணையில் இருந்து தமிழகத்துக்குச் சேர வேண்டிய தண்ணீரை மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும். தவெக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி பயிர்க்கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கண்டன உரையாற்றினார். இதில், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள், போலீஸார் முன்னெச்சரிக்கையாக ஏற்படுத்தியிருந்த தடுப்புகளைத் தள்ளிவிட்டு, ஆட்சியர் அலுவலகத்துக்கு பேரணியாக வந்தனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் மூடப்பட்டிருந்த பிரதானக் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைய முயன்ற போராட்டக்காரர்கள்.
அப்போது, ஆட்சியர் அலுவலக பிரதான கதவுகள் மூடப்பட்டதால், போராட்டக்காரர்கள் கதவுகளைத் தட்டி உள்ளே நுழைய முயன்றனர். பின்னர், ஆட்சியர் வந்து பதில் அளித்தால்தான் கலைந்து செல்வோம் எனக் கூறி அலுவலக வாயிலில் அமர்ந்து முழக்கமிட்டனர். மாவட்ட எஸ்.பி. கேல்கர் சுப்பிரமணிய பாலச்சந்திரா அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டக்காரர்கள் சமாதானமடையவில்லை.
ஆட்சியருடன் சந்திப்பு: அதைத் தொடர்ந்து, ஒரு மணி நேரம் கழித்து ஆட்சியர் பிரவீன் குமாரை, கே.பாலகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏக்கள் மாரிமுத்து, நாகை மாலி உள்ளிட்ட குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகளை மாநில அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக ஆட்சியர் உறுதி அளித்ததையடுத்து, 3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்தப் போராட்டத்தின்போது ஆட்சியர் அலுவலக பிரதான கதவு மூடப்பட்டிருந்ததால் பணிகள் பாதிக்கப்பட்டன.