

சென்னை: தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநரின் உரை ஆக்கபூர்வமாக இருப்பினும் உழைக்கும் மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை என்பது ஏமாற்றம் அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
“தொழிலாளர் நலன், சட்ட உரிமைகள், கண்ணியமான வாழ்வுக்கான ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து ஒரு வார்த்தை கூட ஆளுநர் உரையில் இல்லை என்பதும், மத்திய அரசின் தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகள் குறித்தும் ஆளுநர் உரை அமைதி காத்திருப்பதும் பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.” எனத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ”முதல்வர் உள்ளிட்ட அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டு, வந்தே மாதரம் பாடலுக்கு முதலிடம் வழங்கப்பட்ட மரபு மீறல் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் வழக்கம் போல முதலிடம் பெற்றது. பேரவை மரபு நிலை நாட்டப்பட்டதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், தனது தேர்தல் அறிக்கையில் அளித்த உறுதி மொழிகளை நிறைவேற்ற ஆளுநர் உரையின் மூலம் மீண்டும் ஒரு முறை உறுதியளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நீண்ட காலமாக கடைப்பிடித்து வரும் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கை தொடர்ந்து உறுதியாக முன்னெடுக்கப்படும் என அறிவித்திருப்பதும், இந்தி மொழியை திணிப்பதன் மூலம் மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை செயல்படுத்த நிர்பந்தித்து வருவதையும், இதன் அடிப்படையில் தமிழக கல்வித் துறைக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.3,458 கோடியை நிறுத்தி வைத்திருப்பது சரியல்ல என ஆளுநர் உரை விமர்சித்துள்ளது.
தமிழர் தொன்மை நாகரிகம் குறித்த தொல்லியல் ஆய்வுகள் விரிவு படுத்துவதில் அக்கறை காட்டுவதாக ஆளுநர் உரை தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட நிதித்துறை வெள்ளை அறிக்கை அடிப்படையில் வருவாய் கசிவுகளை தடுத்து, வருவாயை பெருக்கி, ஊழல் இல்லாத அரசு நிர்வாகம் தருகிற முயற்சியை ஆளுநர் உரை வெளிப்படுத்துகிறது. நல்ல ஆக்கபூர்வ அணுகுமுறை கொண்ட ஆளுநர் உரை வரவேற்கதக்கது.
எனினும் புதிய தொழில் கொள்கை அறிவிக்கப்படும், தொழில் வணிகம் எளிமையாக்கப்படும் (EASE OF DOING BUSINESS), என உறுதியளிக்கும் ஆளுநர் உரையில், தொழிலாளர் நலன், சட்ட உரிமைகள், கண்ணியமான வாழ்வுக்கான ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து ஒரு வார்த்தை கூட ஆளுநர் உரையில் இல்லை என்பதும், மத்திய அரசின் தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகள் குறித்தும் ஆளுநர் உரை அமைதி காத்திருப்பதும் பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.
விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஊரகப் பகுதி உடல் உழைப்புத் தொழிலாளர்கள் 20 ஆண்டுகளாக பெற்று வந்த சட்டபூர்வ வேலை பெறும் உரிமையை பறிக்கும் வி.பி ஜிகிராம் ஜி திட்டத்தை தமிழக அரசு ஏற்கக் கூடாது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீது ஆளுநர் உரை கவனம் செலுத்தாது ஊரகப் பகுதி உழைக்கும் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.
ஐந்து ஏக்கர் வரை நிலம் உள்ள சிறு, குறு விவசாயிகளின் பயிர்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதிக்கு மாறாக, கடன் தொகை அளவை அடிப்படையாகக் கொண்டு ரூ.75 ஆயிரம் வரையான கடன் தள்ளுபடி என்பது விவசாயிகளுக்கு முழு நிவாரணம் அளிக்காது என்பதை கருத்தில் கொண்டு மறு பரிசீலனை செய்து, தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அக்கறை காட்டும் ஆளுநர் உரையில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், அமைப்பு சாரத் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் உணர்வுகளையும் பிரதிபலிப்பதாக அமைந்திருக்க வேண்டும் என்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது” என்று வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.