காஸ் சிலிண்டர், உரங்கள் தட்டுப்பாடின்றி விநியோகமா? - பிரதமரின் கருத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்
சென்னை: மக்களவையில் காஸ் சிலிண்டர், உரம் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர்கள் கிடைக்காததால் மக்கள் விறகு அடுப்புக்கு மாறி வருகின்றனர்.
அதேபோல், வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர்களின் விநியோகம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, பல உணவு விடுதிகளில் வழக்கமான உணவுகள் வழங்கப்படுவதில்லை.
இதனால் பொதுமக்களும், வெளியூர்களுக்கு செல்வோரும் உணவு கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மக்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் சமையல் காஸ் சிலிண்டர் மற்றும் உரம் சீராக விநியோகம் செய்யப்படுவதாக கூறியுள்ளார். பிரதமர் மோடி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல உண்மையை மறைக்க முயல்கிறார்.
ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வந்ததை, அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடிபணிந்து நிறுத்தியது தான் இந்த அவலத்துக்கு முக்கிய காரணமாகும். அதேபோல், மேற்காசிய போரால் இந்தியாவிலும் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆனால், பிரதமர் மோடி உரம் சீராக விநியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறுவது உண்மைக்கு மாறானது, கண்டனத்துக்குரியது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படும், மத்திய பாஜக அரசு இனியாவது தனது வெளியுறவு கொள்கையை மாற்றி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
