

மதுரை: கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க தடை விதிக்கக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மறுத்து விட்டது.
உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, பூர்ணிமா அமர்வில், நாம் தமிழர் கட்சி மீனவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தீரன் திருமுருகன் நேற்று ஆஜராகி, கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்க தடை விதிக்க வேண்டும். இது தொடர்பான மனுவை அவசர மனுவாக ஏற்று விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், இதில் நாங்கள் தலையிட முடியாது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இருந்தாலும் மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுக்கப்படும் எனக் கூறினர்.
பின்னர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கரூரில் 41 பேர் உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட து. விசாரணையை கண்காணிக்க முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் குழுவையும் அமைத்தது.
இந்நிலையில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு ஜூலை 10-ல் நடைபெறும் விழாவில் அரசுப் பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கவுள்ளார். அரசுப்பணி என்பது அரசின் கருணை உதவி அல்ல. அது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் அனைத்து தகுதியான குடிமக்களுக்கும் சமவாய்ப்பின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய பொது உரிமையாகும். அந்த அரசுப் பணியை அரசாணை, சேவை விதிகள் மற்றும் வெளிப்படையான கொள்கைகளின் அடிப்படையில் மட்டுமே வழங்க முடியும்.
கரூர் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர அரசுப் பணி வழங்கினால் விசாரணையில் சிக்கல் ஏற்படும். எனவே விசாரணை முடியும் வரை கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களைச் சேர்நதவர்களுக்கு அரசுப்பணி வழங்க தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.