

கோப்புப் படம்
சென்னை: திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அனுமதி கோரி அளிக்கப்பட்ட மனுவுக்கு மாவட்ட காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, திருப்பூர் மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் செயற்குழு உறுப்பினர் எஸ்.அன்புமணி தாக்கல் செய்த மனுவில், ‘விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு செப்டம்பர் 14-ம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை காட்டுப்பாளையம் பகுதியில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் அனுமதி கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு ஆண்டுதோறும் பிறப்பிக்கப்படும் விதிமுறைகளைப் பின்பற்ற தயாராக இருக்கிறோம்.
எனவே, இது குறித்து நாங்கள் அளித்துள்ள விண்ணப்பத்தை உரிய காலத்துக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘கடந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு அனுமதி வழங்குவதில் என்ன பிரச்சினை உள்ளது?’ என கேள்வி எழுப்பினார்.
அதற்கு அரசுத் தரப்பில், இது தொடர்பாக மாவட்ட காவல் துறையிடம் கேட்டு பதிலளிப்பதாக கூறப்பட்டது.
இதையடுத்து, இந்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.