

கோவை பாரதியார் பல்கலை.யில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. உடன், ஹோமிபாபா தேசிய கல்வி நிறுவன துணைவேந்தர் காமாட்சி முதலி, உயர்கல்வி துறைச் செயலர் பொ.சங்கர் உள்ளிட்டோர்.
கோவை: திறன் சார்ந்த கல்வி முறையை, தேசிய கல்விக் கொள்கை ஊக்குவிக்கிறது என்று ஹோமிபாபா தேசியக் கல்வி நிறுவன துணைவேந்தர் காமாட்சி முதலி கூறினார்.
கோவை பாரதியார் பல்கலை.யில் 40-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. தமிழக உயர்கல்வித் துறைச் செயலர் பொ.சங்கர் வாழ்த்துரை வழங்கினார். ஆளுநரும், பல்கலை. வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்து, 1,500-க்கும் மேற்பட்டோருக்கு பட்டங்கள் மற்றும் சிறப்பிடம் பெற்றவர்களுக்குப் பதக்கங்களை வழங்கினார்.
பல்வேறு பாடப்பிரிவுகளைச் சேர்ந்த 92,287 பேர் பட்டம் பெற்றனர். விழாவில், முதன்மை விருந்தினராகப் பங்கேற்ற ஹோமிபாபா தேசிய கல்வி நிறுவன துணைவேந்தர் காமாட்சி முதலி பேசியதாவது: இந்தியாவில் படையெடுப்புக்கு முன்பு தரமான கல்விமுறை இருந்தது. படையெடுப்புக்குப் பின்னர் பாரம்பரியமிக்க கல்வி முறை அழிக்கப்பட்டது.
பிரிட்டிஷ் காலத்தில் நிர்வாக அடிப்படையிலான கல்வி முறைவழங்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின்னர் கல்வித் தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தேசிய கல்விக் கொள்கை சிறப்பான கல்வி முறையையும், திறன் சார்ந்த கல்வி முறையையும் ஊக்குவிக்கிறது.
தேசிய அளவில் உயர் கல்வி பெறுவோர் சதவீதம் 28 ஆகும். அதேநேரத்தில், தமிழகத்தில் இது 47 முதல் 50 சதவீதமாக உள்ளது. தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம், ‘தமிழ் புதல்வன்’ திட்டம் ஆகியவற்றின் மூலம் உயர் கல்வி பயில்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, உயர்கல்வி பயிலும் மகளிரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் சார்பில் தமிழகத்தில் அதிக அளவில் கல்வி நிறுவனங்கள் உள்ளதால்தான் இது சாத்தியமாகிஉள்ளது.
‘வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்ற இலக்கை அடைய நமது மின் உற்பத்தியை 10 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டும். அணுசக்தி உற்பத்தியை ஊக்கப்படுத்தும் வகையில், மத்திய அரசு சார்பில் ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அணுசக்தி உற்பத்தித் துறையில் தனியார் நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், பல்கலை. பதிவாளர் ஆர்.ராஜவேல், தேர்வாணையர் கே.விஜயராணி மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.