

சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வறை, பேட்டரி வாகனங்கள் உடனடியாக வழங்கப்படும் என்று அமைச்சர்கள் உறுதி அளித்ததால், போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் பணி நிரந்தரம், சம்பள உயர்வு, மகப்பேறு விடுப்பு, உணவுப் படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உழைப்போர் உரிமை இயக்கத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கெனவே மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன், அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எற்படவில்லை.
இந்நிலையில் 16-வது நாளான நேற்று ரிப்பன் மாளிகை வளாகத்தில் போராட்டம் நடைபெற்றது. அவர்களுடன் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேசிய அமைச்சர் ஆனந்த், ‘‘உங்களைச் சந்தித்து உங்கள் கோரிக்கையைக் கேட்குமாறு முதல்வர் எங்களை அனுப்பி வைத்துள்ளார். உங்கள் கோரிக்கை நியாயமானது. இப்போது நிதிநிலை மோசமாக இருக்கிறது. நிதி நிலையைப் பொறுத்து உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்’’ என்றார்.
உங்கள் வீட்டுப் பிள்ளை
அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் பேசும்போது, ‘‘இது உங்கள் அரசு. என்னென்ன முடியுமோ அனைத்து கோரிக்கைகளையும் இந்த அரசு நிறைவேற்றும்’’ என்றார். அமைச்சர் ராஜ்மோகன் பேசும்போது, ‘‘நாங்கள் இங்கு அமைச்சராக வரவில்லை. உங்கள் வீட்டுப் பிள்ளையாகத்தான் இங்கு நிற்கிறோம். போராடுவது உங்கள் உரிமை. உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவது எங்கள் கடமை’’ என்றார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசும்போது, ‘‘கடந்த ஆட்சியில் பல துறைகளில் வெளி முகமை மூலமாகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை உடனே மாற்ற முடியாது. கடந்த ஆட்சியில் கடன் வாங்கி ஊழல் செய்தார்கள். இந்த ஆட்சியில் கடன் வாங்கி மக்கள் நலத்திட்டங்களை முதல்வர் செய்து வருகிறார். குடும்ப ஊழலை ஒழித்துள்ளார். சென்னை அழகாக இருப்பதற்கு நீங்கள்தான் காரணம். உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் விஜய்க்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்’’ என்றார்.
அதைத் தொடர்ந்து, ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் தலைமையில், ஆணையர் ஜி.எஸ்.சமீரன் முன்னிலையில், உழைப்போர் உரிமை இயக்க தலைவர் கு.பாரதி மற்றும் தூய்மைப் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பின்னர், செய்தியாளர்களிடம் பாரதி கூறியதாவது: நாளொன்றுக்குத் தூய்மைப் பணியாளர்களின் உணவுக்காக ஒருவருக்கு ரூ.50 செலவிடப்படுகிறது. அந்தப் பணம் உணவுப் படியாக அடுத்த மாதம் முதல் வழங்கப்படும். மொத்தம் உள்ள 200 வார்டுகளில், 197 வார்டுகளில் பெண் தூய்மைப் பணியாளர்களுக்கான கழிப்பறை மற்றும் ஓய்வறை வசதி ஒரு மாதத்தில் ஏற்படுத்தப்படும். போராட்டத்தில் ஈடுபட்டதற்காகத் தூய்மைப் பணியாளர்கள், வழக்கறிஞர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும்.
புதிதாக 300 பேட்டரி வாகனம்
தண்டையார்பேட்டை, அம்பத்தூர், அண்ணா நகர் ஆகிய மண்டலங்களுக்குப் புதிதாக 300 பேட்டரி வாகனங்கள் வழங்கப்படும். முதல்கட்டமாக இம்மாத இறுதிக்குள் 160 வாகனங்கள் வழங்கப்படும். இறந்த தூய்மைப் பணியாளர்களுக்கான இழப்பீடு வழங்கப்படும். அக்.10-ம் தேதிக்குள் மழை கோட்டு வழங்கப்படும். வாரம் ஒரு இணை கையுறை, நாளொன்றுக்கு 2 முகக்கவசம் வழங்கப்படும் என்று அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர்.
அக்டோபரில் அடுத்த கூட்டம்
அக்.3-ம் தேதி அடுத்த கூட்டம் நடைபெறும். அதில், வார விடுப்பு, மகப்பேறு விடுப்பு, மாதவிடாய் விடுப்பு, ஆட்சியர் நிர்ணயித்த தினக்கூலி ரூ.832 வழங்குவது தொடர்பாக அரசுடன் கலந்தாலோசித்து தெரிவிக்கப்படும். 2 மாதங்களுக்கு ஒரு முறை குறைதீர் கூட்டங்கள் நடைபெறும். 4 மாதங்களுக்கு ஒரு முறை ஆணையர் தலைமையில் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்படும். முதல்வரைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர். அதனால் 16 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை தள்ளிவைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் ராஜ்மோகன் கூறும்போது, ‘‘தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் நிதி மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் உள்ளன. அவை பேசி தீர்க்கக்கூடியதுதான். தூய்மைப் பணியாளர்களுக்கான ஓய்வறை அமைப்பது தொடர்பான பணிகளை நானே நேரில் சென்று பார்வையிட உள்ளேன்’’ என்றார்.