234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் காங்கிரஸில் இன்று முதல் விருப்பமனு விநியோகம்
சென்னை: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்காக 234 தொகுதிகளுக்கும் இன்று முதல் விருப்பமனு விநியோகம் செய்யப்படும் என மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்துள்ளது.
இந்நிலையில் செல்வப் பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: 2026-ம் ஆண்டு நடை பெறவுள்ள தமிழக சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்களிடமிருந்து 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகின்றன.
கட்டணமில்லா விருப்ப மனு படிவத்தினை இன்று முதல் டிச.15-ம் தேதி வரை கட்சி தலைமை அலுவலகத்திலோ அல்லது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திலோ பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைனிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விருப்பமனு படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, தனியாக இணைக்க வேண்டிய இதர விபரங்களை இணைத்து டிச. 15-ம் தேதி மாலை 5 மணிக்குள் கட்சி தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் அல்லது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
