

பிரவீன் சக்கரவர்த்தி
புதுடெல்லி: தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுகிறார். இதனை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் இடம், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் புதன்கிழமை அறிவித்தார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.சண்முகம், தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
சி.வி.சண்முகத்தின் ராஜினாமாவால் காலியாக இருக்கும் அந்த ஒரு மாநிலங்களவை இடத்துக்கு வரும் ஜூன் 18-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தற்போதைய சட்டப்பேரவையில் தவெக அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ளதால், அக்கட்சி ஆதரவு தரும் வேட்பாளரே எளிதில் வெற்றி பெற முடியும் என்ற சூழல் உள்ளது.
இந்நிலையில், தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் முன்வைத்தனர். அது தொடர்பாக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் கேட்டுக் கொண்டனர். அதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கீடு செய்வதாக முதல்வர் விஜய் அறிவித்தார்.
இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களை உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த விவரத்தை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டார். அதில் தமிழகத்தில் இருந்து மாநிலங்களை தேர்தலில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் - பிரவீன் சக்கரவர்த்தி நட்பு: முதல்வர் விஜய் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி இடையே நட்பு ரீதியிலான உறவு இருப்பதாக தகவல் வெளியானது உண்டு. தேர்தலுக்கு முன்பாக கூட தவெக-வுக்கு தனது ஆதரவை பிரவீன் சக்கரவர்த்தி தொடர்ந்து வழங்கி வந்தார். இந்நிலையில், தேர்தலுக்கு பின்பு தவெக ஆட்சி அமைக்க முதல் கட்சியாக காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. இதன் பின்னணியில் பிரவீன் சக்கரவர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இருந்து அவர் மாநிலங்களவை உறுப்பினராக அவர் தேர்வாகிறார்.