

சென்னை: தவெக தங்களை வெளிப்படையாகக் கூட்டணிக்கு அழைத்துள்ளதாக தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: திமுக இன்னும் எங்களைக் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. அதற்காகக் காத்திருக்கிறோம். கே.சி.வேணுகோபால் மரியாதை நிமித்தமாக ஸ்டாலினை சந்தித்தார். அப்போது கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்து பேசப்பட்டது. ஆனால் முடிவு எட்டவில்லை. பேச்சுவார்த்தை தொடரும்.
தவெக எங்களை வெளிப்படையாக கூட்டணிக்கு அழைத்துள்ளது. எங்களுடன் கூட்டணி அமைக்கவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். காங்கிரஸின் தொண்டர் பலத்தை தவெக அங்கீகரித்துள்ளது என்பதே இதன் அர்த்தம்.
ஆனால் தற்போதைக்கு திமுக-வுடன் பேசி வருகிறோம். பேசி முடித்திருந்தால் தேர்தல் பணிகளை தொடங்க 75 நாட்கள் அவகாசம் கிடைத்திருக்கும்.
கடைசி நிமிடத்தில் எங்களை ஒரு நெருக்கடியான நிலைக்குத்தள்ளி, கொடுப்பதை வாங்கி விட்டுபோக வேண்டும் என்கிற கட்டாயத்துக்கு ஆளாக விரும்பவில்லை. மகாராஷ்டிரா, பிஹாரில் இப்படி நடந்ததை நாங்கள் பார்த்திருக்கிறோம். காங்கிரஸின் உண்மையான வாக்கு வங்கி 12 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை உள்ளது. வலிமையான தொண்டர் படை காங்கிரஸிடம் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.