உட்கட்சி ஜனநாயகம் சிதைந்து வருவதாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி காட்டம்

உட்கட்சி ஜனநாயகம் சிதைந்து வருவதாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி காட்டம்
Updated on
1 min read

சென்னை: “உட்கட்சி ஜனநாயகம் சிதைந்து வருவதுடன், ஊழல்களும் மலிந்துவிட்டன” என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இன்றைய நாட்டின் அரசியல் சூழல் மிகுந்த மனச்சோர்வை அளிப்பதாக உள்ளது. பெரும்பாலான அரசியல் கட்சிகளில் ஒரு சிலரின் கைகளில் மட்டுமே அதிகாரம் குவிந்து கிடக்கிறது. கொள்கைப் பிடிப்பு பலவீனமடைந்து வருகிறது. கட்சிகளுக்குள் அர்த்தமுள்ள, ஆழமான ஜனநாயகக் கலந்தாலோசனைகள் முற்றிலுமாக விடுபட்டுவிட்டன. உட்கட்சி ஜனநாயகம் சிதைந்து வருவதுடன், ஊழல்களும் மலிந்துவிட்டன.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, அரசியல் கட்சிகளுக்குள்ளேயே நிலவும் பாலினம், சாதி மற்றும் வர்க்கப் பாகுபாடுகள் ஆழ்ந்த கவலையளிக்கின்றன. இவை சிறிய குறைபாடுகள் அல்ல, அரசியல் எத்தகைய விழுமியங்களைக் காக்க வேண்டுமோ, அவற்றின் அடித்தளத்தையே தகர்க்கும் செயல்களாகும். ஒரு சர்வாதிகார மற்றும் பாசிச ஆட்சி, நாட்டின் ஜனநாயக மற்றும் தாராளமய அரசியலமைப்புச் சட்டக் கட்டமைப்பை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

கொள்கைகள் தொடர்ந்து சமரசம் செய்யக் கூடியவையாகத் தோன்றும்போதும், அரசியல் தேர்வுகளை நியாயப்படுத்துவது கடினமாக மாறும்போதும், சாதாரண மக்கள், குறிப்பாக இளைஞர்கள், பாரம்பரிய அரசியல் கட்சிகள் மீது கொண்டுள்ள அவநம்பிக்கையையும் வெறுப்பையும் நாமே மேலும் வலுப்படுத்துகிறோம். இது நம் அனைவரையும் கவலைகொள்ளச் செய்ய வேண்டிய ஒரு முக்கிய விஷயமாகும்.

ஆனால், ஜனநாயகம், அரசியலமைப்பு விழுமியங்கள் மற்றும் ‘இந்தியத் தன்மை’ என்ற உன்னதக் கருத்தியலைக் காக்க, இனி குடிமக்களே தமக்கான வழிகளைத் தாங்களாகவே கண்டறிய வேண்டியிருக்கும் என்றே எனக்குத் தோன்றுகிறது. மிகுந்த மனவருத்தத்தோடும், அதேசமயம் முழுப் பொறுப்புணர்வோடும் இதை நான் கூறுகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

உட்கட்சி ஜனநாயகம் சிதைந்து வருவதாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி காட்டம்
“ஜோசப் விஜய் ப்ரோ... எத்தனை நாள் உங்கள் ஆட்சி தாங்கும்?” - நயினார் நாகேந்திரன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in