சென்னை: குதிரை பேரம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊத்தங்கரை தவெக எம்எல்ஏஇளையராஜாவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் 14 பேரை சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் ஏற்கெனவே திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமாருக்கு உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் கைதான சேதுராஜ், நரேஷ் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வாதங்களைக் கேட்ட நீதிபதி, இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
செந்தில் பாலாஜி மனு வாபஸ்
இதற்கிடையே, குதிரை பேர வழக்கில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினமும் இரு வேளையும் ஆஜராக வேண்டும் என தனக்கு விதிக்கப்பட்ட நிபந்தனையை ஜூலை 30 முதல் ஆக.4 வரை 6 நாட்களுக்கு மட்டும் தளர்த்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார்.
அதை அவர் வாபஸ் பெற்றதை அடுத்து, மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.