

சென்னை: அரசு அலுவலகங்களில் யாராவது லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் உடனடியாக புகார் அளிக்கும் விதமாக புதிய வாட்ஸ்-அப் எண்ணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து லஞ்சம், ஊழலை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, அரசு அலுவலர்கள் யாராவது லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் உடனடியாக 94981 80936 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் கொடுக்கலாம் என்று அரசு தற்போது அறிவித்துள்ளது. ஊழலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அறிவிப்பு பலகை
இதுகுறித்து அனைத்து துறைகளின் செயலர்கள், இயக்குநர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் எம்.சாய்குமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகளை கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும்.
அதில், ‘லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம்’ என்ற வாசகம் தெளிவாகவும், மக்கள் பார்க்கும் வகையிலும் காட்சிப்படுத்தப்பட வேண்டும். இதுதவிர, தமிழிலும், ஆங்கிலத்திலும் புகார் அளிக்கும் நடைமுறைகள் இடம்பெற்ற மாதிரி அறிவிப்பு பலகையும் அலுவலகங்களில் வைக்கப்பட வேண்டும்.
அரசுத் துறைகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும் வாட்ஸ்-அப் புகார் எண் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் (ஊழல் தடுப்பு, கண்காணிப்பு இயக்குநரகம் - DVAC) இணையதள முகவரியை வெளியிட வேண்டும்.
வாட்ஸ்-அப் மட்டுமின்றி, dvac@nic.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும், 044-22321090, 22321085, 22310989, 22342142 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவும் பொதுமக்கள் லஞ்சம் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.
எழுத்துப்பூர்வமான புகார்களை ‘இயக்குநர், லஞ்ச ஒழிப்புத் துறை, 293, எம்கேஎன் சாலை, ஆலந்தூர், சென்னை-16’ என்ற முகவரிக்கு நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.