“அமைச்சர் விஸ்வநாதன் மீது ஆளுநரிடம் பாஜக புகார் அளித்தது வெறுப்பரசியல்” - மாணிக்கம் தாகூர்

“அமைச்சர் விஸ்வநாதன் மீது ஆளுநரிடம் பாஜக புகார் அளித்தது வெறுப்பரசியல்” - மாணிக்கம் தாகூர்
Updated on
1 min read

சென்னை: “தமிழக அமைச்சர் பெ.விஸ்வநாதன் மீது பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உண்மைக்குப் புறம்பாகத் தமிழக ஆளுநரிடம் புகார் அளித்திருப்பது வன்மையாகக் கண்டனத்துக்குரியது. பெ.விஸ்வநாதன் மீது ஆளுநரிடம் அளிக்கப்பட்ட அறிக்கை ஆர்எஸ்எஸ்ஸின் வெறுப்பரசியலையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது” என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தமிழக அரசின் உயர் கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் மீது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் உண்மைக்குப் புறம்பாகத் தமிழக ஆளுநரிடம் புகார் அளித்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் பிறந்தநாளினை முன்னிட்டு பெ.விஸ்வநாதன் அவரது சொந்தத் தொகுதியில் விளையாட்டு நிகழ்ச்சிகளையும், குழந்தைகளுக்கான யோகா நிகழ்ச்சியையும், தன்னுடைய குழந்தைகளாகக் கருதி வாஞ்சையோடு விழா நடத்தியதைக் குறை கூறுவது "காமாலைக் கண்ணனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்" என்கிற கதையாக இருக்கிறது.

மேலும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் உயர்கல்வி அமைச்சராக இருக்கக் கூடாது என்கிற ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தத் துடிக்கிற ஆர்.எஸ்.எஸ்.ஸின் போதகர் கேசவநாயகம் எழுதிக் கொடுத்ததை எடுத்துக் கொண்டுபோய் ஆளுநரிடம் அளித்த குற்றச்சாட்டினால் உயர்கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஆதிக்கமே மேலோங்க வேண்டும் என்கிற சித்தாந்தத்தையே இக்குற்றச்சாட்டு நிரூபிக்கிறது.

பெ.விஸ்வநாதன் மீது ஆளுநரிடம் அளிக்கப்பட்ட அறிக்கை ஆர்.எஸ்.எஸ்.ஸின் வெறுப்பரசியலையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்பதே உண்மையாகும்’ எனத் தெரிவித்துள்ளார்.

“அமைச்சர் விஸ்வநாதன் மீது ஆளுநரிடம் பாஜக புகார் அளித்தது வெறுப்பரசியல்” - மாணிக்கம் தாகூர்
முதல்வர் விஜய் அறிவுறுத்தலின்படி ‘தாயுமானவர்’ திட்டம் 60 வயது வரை விரிவாக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in