

கோவை சூலூர் விமானப்படை தளத்தில் விமானி நமன்ஸ் ஷ்யால் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர். (உள்படம்) நமன்ஸ் ஷ்யால்
கோவை / புதுடெல்லி: துபாய் சாகச நிகழ்வில் உயிரிழந்த, இந்திய விமானப்படையைச் சேர்ந்த விமானி விங் கமாண்டர் நமன்ஸ் ஷ்யால் உடலுக்கு சூலூர் விமானப்படை தளத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, இறுதிச் சடங்குக்காக நமன்ஸ் ஷ்யாலின் உடல் இமாச்சலப் பிரதேசத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த இந்திய விமானப்படை விமானி விங் கமாண்டர் நமன்ஸ் ஷ்யால் கோவை சூலூரில் உள்ள விமான சாகசப் படைப் பிரிவில் பணியாற்றி வந்தார். இவரது மனைவியும் விமானப்படை அதிகாரியாக சூலூர் விமானப்படை தளத்தில் பணியாற்றி வருகிறார். அவரது ஆறு வயது மகள் மற்றும் பெற்றோர் சூலூரில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், துபாயில் நடைபெற்ற விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானம் பங்கேற்றது. இந்தக் கண்காட்சி கடந்த 21-ம் தேதி நிறைவடைந்தது. அன்று நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில், தேஜஸ் போர் விமானத்தை விங் கமாண்டர் நமன்ஸ் ஷ்யால் இயக்கினார்.
வானில் தலைகீழாகப் பறந்து சாகசம் நிகழ்த்திய தேஜஸ் போர் விமானம் திடீரென தரையில் மோதி வெடித்துச் சிதறியது. இதில் பைலட் நமன்ஸ் ஷ்யால் உயிரிழந்தார். இந்த சம்பவம் பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நமன்ஸ் ஷ்யால் உடலுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ராணுவம் சார்பில் நேற்று முன்தினம் மரியாதை செலுத்தப்பட்டது.
இமாச்சலப் பிரதேசத்துக்கு... இதையடுத்து, நமன்ஸ் ஷ்யாலின் உடல் விமானப் படையின் சி130ஜே விமானம் மூலம் சூலூர் விமானப்படை தளத்துக்கு நேற்று கொண்டுவரப்பட்டது. அங்கு கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் விமானப்படை அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் இறுதிச் சடங்குக்காக நமன்ஸ் ஷ்யாலின் உடல் சொந்த ஊரான இமாச்சலப் பிரதேசத்தின் கங்ராவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதற்கிடையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: ‘விங் கமாண்டர்’ நமன்ஸ் ஷ்யாலுக்கு வீர வணக்கம். அவரது உடல் கோவைக்குக் கொண்டுவரப்பட்ட காட்சிகளைக் கண்டு கலங்கினேன். கோவை சூலூர் விமானப்படை தளத்தில் பணிபுரிந்த அவருக்குத் தமிழகம் தனது அஞ்சலியைச் செலுத்துகிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.