

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமானவரி பாக்கியை வசூலிக்கும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வருமான வரித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா செலுத்த வேண்டிய ரூ.13 கோடி வருமான வரி பாக்கியை செலுத்தும்படி அவரது சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள் ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக்குக்கு வருமானவரித் துறை நோட்டீஸ் பிறப்பித்தது. இதை எதிர்த்து ஜெ.தீபா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது வருமானவரித் துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித் துறை பதில் மனு தாக்கல் செய்யவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது.
அதையடுத்து இது தொடர்பாக இரு வாரங்களில் பதிலளிக்க வருமானவரித்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை வரிபாக்கி வசூல் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்திவைத்து உத்தரவிட்டார்.