

பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை நேற்று திறந்துவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர். படம்: எல்.பாலச்சந்தர்
ராமநாதபுரம்: பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் மணிமண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான சந்தை வளாகப் பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் ரூ.3 கோடி மதிப்பில், தியாகி இமானுவேல் சேகரன் உருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து, இமானுவேல் சேகரனின் சிலைக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் மணி மண்டபத்தை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், கே.ஆர்.பெரியகருப்பன், மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், எம்.பி.க்கள் நவாஸ்கனி, ராணி ஸ்ரீகுமார், எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், செ.முருகேசன், ராஜா, தமிழரசி, கிருஷ்ணசாமி, ஸ்டாலின்குமார், முத்துராஜா, மக்கள் விடுதலைக் கட்சியின் நிறுவனத் தலைவர் முருகவேல்ராஜன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வைத்தியநாதன், ராமநாதபுரம் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், நகராட்சி உறுப்பினர் கனிமொழி துரைமுருகன், இமானுவேல் சேகரனின் மகள் சுந்தரி பிரபாராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முதல்வர் மணிமண்டபத்தை திறந்து வைத்ததை தொடர்ந்து, ஏராளமான பொதுமக்கள் மணிமண்டபத்தை பார்வையிட்டனர். முதல்வர் வருகையையொட்டி சட்டம், ஒழுங்கு கூடுதல் டிஜிபி மகேஷ்வர் தயாள், தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி, ராமநாதபுரம் சரக டிஐஜி தேஷ்முக் சேகர் சஞ்சய், காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் உட்பட 2,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக, தெளிச்சாத்த நல்லூரிலிருந்து பரமக்குடி தியாகி இமானுவேல் சேகரன் மணிமண்டபம் வரை 5 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறமும் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு நின்று முதல்வரை வரவேற்றனர்.