

மகளிர் இடஒதுக்கீட்டை தடுப்பதாக திமுக – காங்கிரஸ் மீது பாஜகவினர் அபாண்டமாக பழி சுமத்துகின்றனர். ஏப்ரல் 17-ம் தேதியோடு என்டிஏ கூட்டணி காலியாகிவிட்டது என ஓசூர் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்திவாடியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தமிழகத்தின் உரிமையை திமுகவால் காப்பாற்ற முடியும் என்பதை நிரூபித்துவிட்டு கெத்தாக வந்து இங்கு நிற்கிறேன். ராகுல் காந்தி தமிழகத்திற்கு பிரச்சாரம் செய்ய வந்தார்.
அப்போது அவர் பேசும்போது, “மோடியால் ஸ்டாலினை கண்ட்ரோல் செய்ய முடியாது, அடிமை அதிமுக ஆட்சியை தமிழகத்தில் நிறுவ பார்க்கிறார்” என பேசினார். டெல்டா மாவட்டத்துக்கு ராகுல் வந்திருந்தார். தென்கோடியில் பிரச்சாரத்தில் இருந்தார். நான் சென்னையில் பிரச்சாரம் செய்தேன். ராகுல்காந்தியும் நானும் சுற்றிச் சுற்றி பிரச்சாரம் செய்து வெற்றியை உறுப்படுத்தி வருகிறோம்.
தமிழகத்தில் 40 ஆயிரம் தொழிற்சாலைகள் உள்ளன. ஆனால் மத்திய அரசு தமிழகத்தின் வளர்ச்சித் திட்டப் பணிகளை தடுக்கிறது. இதனை தட்டிக்கேட்க முடியாமல் பழனிசாமி உள்ளார். வாக்கு கேட்டு வரும் பழனிசாமியிடம் கேள்வி கேளுங்கள். காரில் நான் கிரிக்டெ் பார்த்தது தவறு என பழனிசாமி கூறுகிறார். முதல்வர் கிரிக்கெட் பார்ப்பது தவறு இல்லை. ஆனால், தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டை டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என கூறினாரே அது தான் தவறு. தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேச வேண்டிய அனைத்தும் அரசு நிகழ்வில் மோடி பேசியது, தேர்தல் விதிமுறை மீறியதாக உள்ளது.
மகளிர் இடஒதுக்கீட்டை தடுப்பதாக திமுக- காங்கிரஸ் மீது பாஜகவினர் அபாண்டமாக பழி சுமத்துகின்றனர். பிரதமர் மோடி அவர்களே, ஏப்ரல் 17-ம் தேதியோடு என்டிஏ கூட்டணி காலியாகிவிட்டது. தொகுதி மறுவரையறையை நாடாளுமன்றத்தில் நிலைகுலைய வைத்துள்ளோம். திராவிட மாடல் திட்டங்கள் மக்கள் மத்தியில் நன்கு ‘ரீச்’சாகியுள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர் வரை திட்டம் சென்றுள்ளது. பிறந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து திட்டம், காலை உணவுத் திட்டம், அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை திட்டம், பள்ளிக் கல்வி முடித்த பின்னர் நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணினி வழங்கி உள்ளோம். மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால், மேலும், 35 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்க உள்ளோம்.
எனது சக்தியை மீறி பிரச்சாரம் செய்கிறேன். 200 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். திமுக தவிர மற்றவர்களுக்கு போடுகிற வாக்கு பாஜகவிற்கு போடுகிற வாக்காகும். தமிழகத்தில் திமுகவிற்கும் என்டிஏ கூட்டணிக்கும் ஜனநாயகப் போர் நடக்கிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து தாய் தமிழ் நாட்டை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.